பக்கம் எண் :

68தமிழர் மதம்

பின்னர்த் தொண்டும்(ஒன்பதும்), அதன் பின் பத்துமாகக் கணக் கிடப்பட்டு வந்திருக்கின்றன. முதலெட்டும் பாரதக் காலத்திற்குப் பின்னரே தோன்றியிருத்தல் வேண்டும். சில பனுவல்கள் புத்தரைத் தொண்டாம்(ஒன்பதாம்) தோற்றரவாகக் குறிக்கும்.

    முதல் தோற்றரவுக் கதை, சதபத பிராமணத்திற் சொல்லப் பட்டுள்ள சத்தியவிரதன் கதையை அடிப்படையாகக் கொண்டி ருப்பதாகத் தெரிகின்றது. அவன் கடல்கோளினின்று தப்பிய கப்பலே, மீனாக உருவகிக்கப்பட்டதாகத் தோன்றுகின்றது. அவன் தமிழரசன்(திரவிடபதி) என்றும், அரச முனிவன்(ராஜரிஷி) என்றும், கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

    2ஆம் தோற்றரவுக் கதை, சுரை(ஸு ரா) யுண்டவர் சுரர் என்னும் கருத்தையோ, நிலநடுக்கத்தோடு கூடிய ஒரு கடல்கோட் கதையையோ, தழுவியதாக இருக்கலாம்.      

    3ஆம் தோற்றரவுக் கதை, நிலம் நீரினின்று தோன்றிற்று என்னுங் கொள்கையைத் தழுவியதாகும்.

     "உண்முறை வெள்ள மூழ்கியார் தருபு  
      மீண்டு பீடுயர் பீண்டி யவற்றிற்கும்  
      உள்ளீ டாகிய இருநிலத் தூழியும்  
      நெய்தலுங் குவளையும் ஆம்பலுஞ் சங்கமும்  
      மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய  
      செய்குறி யீட்டங் கழிப்பிய வழிமுறை  
      கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய  
      ஊழி யொருவினை யுணர்த்தலின் முதுமைக்  
      கூழி யாவரும் உணரா  
      வாழி முதல்வநிற் பேணுதுந் தொழுது." (பரிபா. 2 : 10-19)

    4ஆம் தோற்றரவுக் கதை, நரமடங்கல் வடிவாகச் செதுக்கிய கற்றூண், அதைப் பொன்னன்(இரணியன்) உதைத்தவுடன் அவன் மீது விழுமாறு, எளிதாய்ப் பொருத்தி அல்லது நிறுத்தி வைக்கப் பட்ட சூழ்ச்சி பற்றியதாயிருக்கலாம்.

    5ஆம் தோற்றரவுக் கதை, ஆரியரைப் போற்றாதிருந்த மாவலி என்னும் மாபெருஞ் சேரவேந்தன் ஒரு படுகுழியில் வீழ்ந்து மறையுமாறு, ஒரு குள்ளப் பிராமணன் வாயிலாகச் செய்யப்பட்ட சூழ்ச்சிபற்றியதா யிருக்கலாம்.

    6ஆம் 7ஆம் தோற்றரவுக் கதைகள், ஒரே காலத்தில் நிகழ்ந்தன என்பதும், ஒன்று இன்னொன்றை எதிர்த்துத் தோற்றது என்பதும், தோற்றது பிராமணக் குலத்திற் பிறந்து அரசர் வகுப்பை அழிக்கவே