பக்கம் எண் :

76தமிழர் மதம்

New Page 1

சொல்லாகக் கொண்டனர். மயக்கஞ்செய்வது மாயையேயன்றி ஆணவமன்று. வினைப்பயனாகிய ஊழ் (நியதி) ஒரு தனி மெய்ப் பொருளாகக் கொள்ளப்படுவதால், அதினின்றும் வேறாக வினை (கன்மம்) என்று மாசு கொள்ள வேண்டுவதில்லை.

    இல்லறத்தாலும் வீடுபேறுண் டென்பது தமிழர் கொள்கை யாதலால், "இருள்சேர் இருவினை" என்று திருவள்ளுவர் கூறியது, தெரிந்தும் தெரியாதும் செய்யும் இருவகைத் தீவினைகளையே.

(14) மந்திரம்

ஓங்காரம்(பிரணவம்)

    ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.

    வடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன்  = குலோத்துங்கன் என்பதுபோல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.

    ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை,

     "ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி" (திருமந். 765)
   
     "ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்" (திருமந்.  941)

என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை

     "ஓமெனும் ஓங்காரத் துள்ளே யொருமொழி  
      ஓமெனும் ஓங்காரத் துள்ளே யுருவரு  
      ஓமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்  
       ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே." (திருமந். 2627)
   
     "ஓங்காரத் துள்ளே யுதித்தவைம் பூதங்கள்  
      ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம்  
      ஒங்காரா தீதத் துயிர்மூன்றும் உற்றன  
      ஓங்கார சீவ பரசிவ ரூபமே." (திருமந். 2628)

என்பவற்றாலும், அறியலாம்.