பக்கம் எண் :

தமிழர் மதம் 81

மந

    மந்திரம் என்பது மனவலிமையே யன்றி எழுத்தொலிப்பன்று. முன்னுதல் = கருதுதல். முன் - மன். மன் + திரம்(திறம்) = மன்றிரம் -மந்திரம். மன் - மனம்.

     "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த  
      மறைமொழி தானே மந்திரம் என்ப." (தொல். 1434)
   
     "எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்  
      திண்ணிய ராகப் பெறின்." (குறள். 666)

    வீடுபேறும் நல்வாழ்வும் இறைவனருளாற் பெறுவனவாத லின், அவன் திருப்பெயரை முழு நம்பிக்கையுடன் ஓதி வழிபடல் வேண்டும். இறைவனுக்கு எல்லா மொழியும் ஒன்றே. ஆயினும் தமிழ், உலக முதன் மொழியும், சிவ(இறைவன்) வழிபாடு தோன்றிய மொழியும், ஆரியத்திற்கு மூலமொழியும், இளைத்தவரும் பேசக் கூடிய மெல்லொலி மொழியும், முழுத் தூய முனிவர் வளர்த்த மொழியும், முதல் மறை இயன்ற மொழியும் ஆதலால், சிவ போற்றி என்னும் செந்தமிழ்த் திரு வைந்தெழுத்தே சிவனுக்கேற்ற சிறந்த மந்திரமாம்.

    'நம' என்னும் வடசொல் உடல் வணக்கத்தைமட்டும் குறிக்கும். 'போற்றி' என்னும் தெய்வத் தமிழ்ச்சொல்லோ, வழுத்துத லோடு கூடிய வணக்கத்தையே குறிக்கும்.

    'சிவாய நம' என்பதிலுள்ள உயிர் நாடிச்சொல், சிவ என்னும் தீந் தமிழ்ச் சொல்லே. ஆதலாற் சிவ போற்றி என்பதே அறிவுடைத் தமிழர்க்கு உரியதாம். சிவ சிவ என்றோதி வணங்கினும் போதும்.

     "சிவசிவ என்கிலர் தீவினை யாளர்  
      சிவசிவ என்றிடத் தீவினை மாளும்  
      சிவசிவ என்றிடத் தேவரு மாவர்  
      சிவசிவ என்னச் சிவகதி தானே" (திருமந். 2667)

    எந்த எழுத்திற்கும் குறிப்புப் பொருளாக எதையும் குறிக்க லாம். ஒவ்வொரு மதத்தாரும் ஒவ்வோர் எழுத்திற்கும் ஒவ்வொரு பொருள் குறிப்பர். கடவுள் வணக்கமும் முழு நம்பிக்கையும் கலந்தாலன்றி எந்த எழுத்தும் சொல்லும் பயன்படா.

    ஈராயிரம் ஆண்டாக வழங்கி வந்ததனால் மட்டும், எந்தத் தொடர்ச்சொல்லும் உண்மையான மந்திரம் ஆகிவிடாது. தமிழறி யாத ஆரியர்க்கே, 'சிவாயநம' என்பது உரியதாம். தமிழர்க்கு உரியது சிவ போற்றி என்பதே. இது ஆரிய ஐந்தெழுத்தினும் வலிமையுள்ள தென்பதைத் தொடர்ந்தோதிக் காண்க.