பக்கம் எண் :

90தமிழர் மதம்

மதப

    மதப் பிரிவுகள் பல்கினமையால், தமிழில் வடசொற் கலப்பும், தமிழர்க்குள் பிரிவினையும், மேன்மேலும் மிக்கன.

(18) கடவுட் சமய மறைப்பு

    உருவ வழிபாட்டினாலேயே ஆரியர்க்குப் பிழைப்பும், தமிழரை முன்னேற வொட்டாது என்றும் அடிமைத்தனத்துள் அமிழ்த்தும் வாய்ப்பும், உண்மையால், கடவுட் சமயம் மறைக்கப் பட்டது.

(19) தொழுகை நூற் புணர்ப்பு

    திருக்கோவில்களி லெல்லாம்,  என்றும் பிராமணரே பூசகராயிருந்து சமற்கிருதத்தில் வழிபாடு நடத்துமாறு, 'ஆகமம்', 'தந்திரம்' முதலிய தொழுகை நூல்களை அமைத்துக்கொண்டனர். ஆகமம் = தோன்றியம்(புதிதாகத் தோன்றியது).

(20) தொன்ம மறவனப்புத் தொடர் சொற்பொழிவுகள்

    பிராமணரைத் தெய்வமாக வுயர்த்தியும் அவர்க்குத் தொண்டு செய்வதை வற்புறுத்தியுங் கூறும், தொன்ம(புராண) மறவனப்பு (இதிகாச)க் கதைகளைத் தொடர்ந்து ஊர்தொறும் விழாக் காலங்களில் இசையொடு சொல்லி வந்ததனால், ஆரியப் பற்றுப் பொதுமக்கள் உள்ளத்திற் பசுமரத் தாணிபோற் பதிந்து, அரத்தத் தோடரத்தமாய்க் கலந்து ஊறிப் போயிற்று. பாரத இராமாயணத் தொடர் சொற்பொழிவுகள்,  இன்றும் நடைபெறுகின்றன.

3. ஆரியத்தால் விளைந்த கேடுகள்

(1) தமிழ மதக் கேடு

வேள்வி வளர்ப்பு

     "அவிசொரிந் தாயிரம் வேட்டலின் றொன்றன்  
      உயிர்செகுத் துண்ணாமை நன்று" (குறள். 259)

என்று திருவள்ளுவர் கண்டித்திருந்தும், பல்வேள்விச் சாலை முது குடுமிப் பெருவழுதி ஆரியப் பல்சிறு தெய்வக் கொலை வேள்வி நெறியைத் தழுவினான். அவனைப் பின்பற்றுமாறு, மாங்குடி மருத னாரும் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனை வேண்டினார். கரிகால் வளவன், பெருநற்கிள்ளி முதலிய சோழ வேந்தரும், பல்யானைச் செல்கெழு குட்டுவன் சேரன் செங் குட்டுவன் முதலிய சேரவேந்தரும், முதுகுடுமி போன்றே கழிமடம் பட்டனர். பேதை வேந்தரையே மாற்றி இருபத்தொரு வேள்வியும்