New Page 1
(2) ஆரிய மேம்பாடு
குல வுயர்த்தம்
கண்ணபிரான் பாரதப் போர் தொடங்குமுன்
அருச்சுனனுக்கு அறிவுறுத்திய செவியறிவுறூஉவாக, கடைக்கழகக் காலத்தில் ஒரு
வலக்காரப் பிராமணனாற் கட்டி வரையப்பட்ட
பகவற்கீதை என்னும் சமற்கிருதப் பனுவலில், பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும்
நால் வரணத்தார்க்கும்,அவ்வவ் வரணத்திற்குரிய குணங்கட் கேற்பக் கடமைகள் வகுக்கப்பட்டுள்ளன
வென்று கூறப்பட்டுள்ளது. இதுவே அந் நூலாசிரியன் கூறக் கருதிய உயிர் நாடிச் செய்தி. முதற் பதினேழ்
அதிகாரங்களிற் பல்வேறு அறவினைகளையும் பத்தியொழுக்கத்தையும் எடுத்துக் கூறி, கடவுள் நம்பிக்கை
யுள்ளவரும் பகுத்தறிவைப் பயன்படுத்தாதவருமான மக்களைப் படிப்படியாக வயப்படுத்தி, இறுதிப் பதினெட்டாம்
அதிகாரம் 41ஆம் சொலவத்தில், பாலொடு தேன் கலந்து படுநஞ்சையூட்டுவது போல் இப் புரட்டுச் செய்தியைப்
புகட்டியிருக்கின்றான்.
நால்வரணப் பகுப்பு இறைவன் ஏற்பாடாயின்,
இந்தியாவிற் போன்றே ஏனை நாடுகளிலும் அவ்வொழுங்கிருத்தல் வேண்டும். அஃதில்லை. மேலும்,
பிராமணர் நால்வரணத்தார் தொழிலையுந் தொன்றுதொட்டுச் செய்து வந்திருக்கின்றனர்.
அருச்சுனன் தன் குரவரையும்
நெருங்கிய உறவினரையும் போர்க்களத்திற் கண்டு, அவரைக் கொல்லத் துணிவு கொள்ளாது
பின்வாங்கியபோது, அவன் தன் கடமையைச் செய்யுமாறு அவனைத் தேற்றியதே கண்ணன் செய்த தெல்லாம்.
பகவற்கீதை போன்ற நூற் செய்தியைப் போர்க்களத்திற் சொல்ல நேரமும் இருந்திருக்காது.
சொல்லியிருப்பின், பகை மறவர் அதற்குள் தாக்கி வென்று மிருப்பர்.
பகவற்கீதையைக் கண்ணனார்
சொல்லியிருப்பின், அவரே னும் அதைச் செவியுற்ற அருச்சுனனேனும் அவ் விருவருள் ஒருவன் சொல்லக்
கேட்ட வேறொருவரேனும், அக் கீதையை எழுதியிருத்தல் வேண்டும். அங்ஙனம் ஒருவரும் எழுதியிலர்.
அக் கீதைக்கு ஆசிரியன் பெயரும் குறிக்கப்படவில்லை. திருத ராட்டிரன் சஞ்சய முனிவனிடம்
போர் நடபடிக்கைகளைப்பற்றி வினவியதாகவும், அம் முனிவன் தான் வியாசனிடம் கேட்டதை அவனுக்குச்
சொன்னதாகவுமே, கீதைச் செய்தி அமைந்துள்ளது. போர்க்களத்தில் இரு படைகளும் போர்த் தொடக்கக்
குறியாகப் போரிசைக் கருவிகளை முழக்கிய பின், ஒரு மாநாட்டுச் சொற்பொழிவினும் மிக
விரிவான உரையாட்டும் செவியறிவுறூஉவும் நிகழ்ந்தன வென்பது, நம்பத் தக்க செய்தியன்று.
|