பக்கம் எண் :

தமிழர் மதம் 93

New Page 1

    மேலும், கண்ணன் இறைவனின் தோற்றரவென்று கொள்ளப் படுவதால், நால்வரணமும் இறைவனாற் பிறவிக் குலமாகப் படைக்கப்பட்டன வென்னும் பொய்யான செய்தியை, அவன் சொல்லியிருக்க முடியாது; சொல்லியிருப்பின், இறைவனின் தோற்றரவாக இருந்திருக்க முடியாது.

    ஆகவே, ஆரிய நால்வரண ஏற்பாட்டை நிலைநிறுத்த வேணவாக் கொண்ட பிற்காலத்துப் பிராமணனொருவன் கட்டிய செய்தியே, வியாச பாரதப் பகுதியாக இடைச் செருகப்பட்ட தெனவுணர்க.

    இளங்கோவடிகளும் திருமூலரும் போன்ற துறவியர்க்குரிய அந்தணன், ஐயன், முனிவன் என்னும் பெயர்கள் மட்டுமன்றி, தெய்வத்திற்கேயுரிய பகவன் என்னும் பெயரும், பிராமணர்க்கு வழங்கி வந்திருப்பது, அவர்க்கு ஏற்பட்ட குலவுயர்த்தத்தைக் காட்டும். துறவு நிலையில் எல்லாரும் சமமேனும், இன்றும் சங்க ராச்சாரியாரைப் பெருமிதத்தொடு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கும் மன்னரும் வெள்ளையரும், தமிழ மடத்தலை வரை அங்ஙனம் வணங்குவதில்லை.

ஏந்தான வாழ்வு

    மூவேந்தராலும், பிராமணர் கூட்டங் கூட்டமாகச் சதுர்வேதி மங்கலம் என்னும் புதிய குடியிருப்புகளிற் குடியேற்றப்பட்டனர். அது அகர மேற்றுதல் எனப்பட்டது. அதைத் திருமூலரும்,

    "அகரம் ஆயிரம் ஆரியர்க் கீயிலென்  
     சிகரம் ஆயிரம் செய்து முடிக்கிலென்  
     பகரும் ஞானி பகலூண் பலத்துக்கு  
     நிகரிலை யென்பது நிச்சயந் தானே" (திருமந். 1824)
   
    "ஆறிடும் வேள்வி அவிகொளும் நூலவர்  
     கூறிடும் விப்பிரர் கோடிபே ருண்பதில்  
     நீறிடுந் தொண்டர் நினைவின் பயனிலை  
     பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே" (திருமந். 1825)

என்று கண்டித்தார்.* அகரம் மருதநிலத்தூர். ஆகையால், சதுர்வேதி மங்கலம் நல்வயல்களோடு கூடியது.

    திருநாள் பெருநாள்களிலும் வெற்றி விழாக்களிலும் வெளி யூர் செல்லும் போதும், மூவேந்தரும் பிராமணர்க்குத் துலைநிறை (துலாபாரம்), பொன்னா(இரணிய கருப்பம்), ஆவாயிரம்(கோச கஸ்ரம்) முதலிய தானங்களைச் செய்துவந்தனர்.

* இங்குக் காட்டப்பட்டுள்ள திருமந்திரச் செய்யுட்கள் சை.சி.நூ.ப.க. பதிப்பு.  வே. விசுவநாதம் பிள்ளை பதிப்பில், ஈரிடத்தும் அந்தணர் என்னும் சொல்லே உள்ளது.