பக்கம் எண் :

10

கணவனும் மனைவியுமாகக் கூடிக்கொள்வது. இது, களவில் தொடங்கு வதும் கற்பில் தொடங்குவதும் என இருவகைத்து. களவென்பது மறைவு; கற்பென்பது வெளிப்படை "நீ இன்னவா றொழுக வேண்டும்" என மணமகள் திருமண ஆசிரியனால் கற்பிக்கப்படும் நிலைமை கற்பு என்பர்.

களவில் தொடங்குவது, இருமாத எல்லைக்குள் என்றேனும் வெளிப் பட்டுக் கற்பாக மாறிவிடும். இக் களவு வெளிப்பாடு, (1) உடன் போக்கு, (2) அறத்தொடு நிலை என்னும் இருவகைகளுள் ஒன்றால் ஏற்படும், உடன்போக்காவது, களவொழுக்கம் தடைப்பட்டவிடத்து அல்லது காதலியின் பெற்றோர் அவளைத் தர இசையாவிடத்து, காதலன் அவளை வேற்றூர்க்கேனும் தன் வீட்டிற்கேனும் அழைத்துக்கொண்டு போய்விடல். அறத்தொடு நிலையாவது, காதலியின் மெலிவு கண்டு அதைப் போக்கு வதற்கு, அவள் பெற்றோர் கட்டுவிச்சி (குறிகாரி), வேலன் (மந்திரக்காரன்) முதலியோரின் துணை வேண்டும் போதோ, அதற்கு முன்னதாகவோ, காதலி தானாகவேனும் தன் தோழி வாயிலாக வேனும் தன் காதலனைப்பற்றித் தெரிவித்தல்.

காதலர் ஒரு நாளுங் களவொழுக்கமின்றிக் கற்பாகவே தம் கூட்டு வாழ்க்கையைத் தொடங்குவதுமுண்டு. இவ் இருவகைத் தொடக்கமும், கரணத்தோடு கூடியதாகவும் இருக்கலாம்; கூடாததாகவு மிருக்கலாம். அக் கரணமும், மணமகன் தானே செய்விப்பதாகவு மிருக்கலாம்; மணமகள் பெற்றோரைக் கொண்டு செய்விப்பதாகவு மிருக்கலாம்.

இங்குக் கற்பென்பது உண்மையில் களவொழுக்கத்தின் வெளிப்பாடே யாயினும், அது பொதுவாகக் கரணத்தொடு கூடியதாகவே கொள்ளப்படும்.

"கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே"

(கற்பியல், 1)

"கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான"
       (மேற்படி 2)


என்பன தொல்காப்பியம்.

உடன்போக்குச் சென்ற காதலன், தன்னூர் வேற்றூராயின் போனவிடத் தும் காதலி யூரேயாயினும், பெரும்பாலும் தன் மனையிலேயே அதை வைத்துக் கொள்வன். "உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர்" என்பதாலும்.

"உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் செயிர்தீர்
காட்சிக் கற்புச்சிறந் தன்று"
        (தொல். களவு. 22)

என்பதாலும், காதலியின் பெற்றோர் காதலனை ஒப்புக்கொண்டு, அவன் வதுவை மணத்தைத் தம் மனையில் நடத்த விரும்பின், அவ் விருப்பம் நிறைவேறுவதுமுண்டு. யார் மனையில் வதுவை நிகழினும், வதுவைக்கு முன் மணமகள் காலில் அவள் பெற்றோரால் அணியப்பட்டிருந்த சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும். அது 'சிலம்புகழி நோன்பு' எனப்படும்.