பட்டதே இன்பம் பரனைநினைந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு" | என்னும் ஒளவையார் செய்யுள், நாற்பொருளியல்பையும் நன்கனம் தெரிவிக்கும். இச் செய்யுளின் முதலடியை, "ஈதலறம் தீவினைவிட் டீட்டல் பொரு" ளென்றும் என்று சிலர் திருத்துவர். சில துறவியர், வரையிறந்து பெண்ணை வெறுத்துப் பெண்ணின் பத்தைப் பழித்திருப்பர். அது துறவியர்க்கே கூறியதென்று இல்லறத்தார் பொருட்படுத்தாது விட்டுவிடல் வேண்டும். விலை மகளுறவையும் நெறிதிறம்பிய காம நுகர்ச்சியையும் பழிக்கலாமே யன்றி, பெண் ணின்பந்தன்னையே பழித்தல் கூடாது. அங்ஙனம் பழிப்பவர், இறைவன் ஏற்பாட்டையும் தம் பெற்றோர் வாழ்க்கையையும் பழிப்பவரேயாவர். மாந்தன் வாழ்க்கை, இல்லறம் துறவறம் என இரு வகைத்து, மனைவியோடு கூடி இல்லத்திலிருந்து, அதற்குரிய அறஞ்செய்து வாழும் வாழ்க்கை இல்லறம்; உலகப்பற்றைத் துறந்து, அதற்குரிய அறத்தோடு கூடிக் காட்டில் தவஞ் செய்து வாழும் வாழ்க்கை துறவறம். அது மணவாநிலையிலும் தொடங்கலாம்; மணந்த நிலையிலும் தொடங்கலாம்.ஒருவன் மணஞ் செய்யாது இறுதிவரை மாணியாய் (பிரமச் சாரியாய்) இருப்பினும், அவன் வாழ்க்கை இல்லறத்தின் பாற்படும்.ஒருவன் நாட்டினின்று நீங்கிக் காட்டில் வாழினும், மனையாளொடு கூடி வாழின், அது இல்லறத்தின் பாற்படுவதே.ஒருவன் இல்லத்திலிருந்து மனையாளொடு கூடி வாழினும், அறஞ் செய்யாது இருப்பின், அவன் வாழ்க்கை இல்லறமாகாது வெறுமனான இல்வாழ்க்கையாம். ஒருவன் துறவு மேற்கொண்டும் அதற்குரிய அறம் பூணானாயின், அது ஈரறத்தொடுங் கூடாது தீவினையை மிகுக்கும் அல்வாழ்க்கையாம்.இக்காலத்தில், துறவு பூண்டோர் காட்டிற்குச் செல்லாது நாட்டிலும் நகரத்திலும் தங்கி, தம்மாலியன்றவரை பொதுமக்கட்குத் தொண்டு செய்வது, சிறந்த துறவாகக் கருதப்படுகின்றது. இறைவன் ஏற்பாட்டின்படி மக்களுலகம் இடையறாது தொடர்ந்து வருவதற்கு இல்லறமே காரணமாதலாலும், துறவியர்க்கும் அவர் முற்றத் துறக்கும்வரை இன்றியமையாத் துணையாயிருப்பது இல்லறத்தாரே யாதலாலும், இல்லறத்தாலும் வீடுபேறு கிட்டுமாதலாலும், மாயமால நடிப்பிற்கிடம் துறவறத்தினும் இல்லறத்திற் குறைதலாலும், இல்லறமே நல்லறமாம். இதனாலன்றோ, |