"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்ஐயர் யாத்தனர் கரணம் என்ப" (கற்பியல், 4) | என்பது தொல்காப்பியம்
கணவனும் மனைவியுமாக ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணைவராய் இல்லறந் தொடங்கும் இருவரும், திருமணத்தன்று மணமக்கள் எனப்படுவர். அவ் விருவரையும் பிரித்துக் கூறுங்கால், மணமகன் மணமகள் என்றும், மணவாளன் மணவாட்டி என்றும், பெண் மாப்பிள்ளை (மணவாளப் பிள்ளை) என்றும், பெண் பிள்ளை என்றும், கூறுவது வழக்கம். மணமகனைப் பிள்ளை என்பது வடார்க்காட்டு வழக்கு.
கணவன் மனைவி, ஆண்மகன் பெண்டாட்டி, அகமுடையான் அகமுடையாள், இல்லாளன் இல்லாள் என்னும் பெயரிணைகள் திருமணத்திற்குப் பின்பு இல்லறக்காலத்தில் நிலையாக வழங்குவன. மணாட்டுப்பெண் என்பது முறையே மாட்டுப்பெண் நாட்டுப்பெண் என மருவி, மருமகள் என்னும் பொருளில், தஞ்சை வட்டாரத்தில் வழங்கி வருகின்றது. தலைவன் தலைவி, தலைமகன் தலைமகள், கிழவன் கிழத்தி (நாடுகிழவோர்) என்பன, அரசக் குலத்தார்க்குரியன வாய், இல்லறம் நெடுகலும் வழங்கும் இலக்கிய வழக்காம். இவற்றுள், கிழவன் கிழத்தி என்பன மனைக்கிழவன் மனைக்கிழத்தி என்னும் வழக்கில் பொதுமக்கட்கும் வழங்கும். மனைக்கிழத்தியை வாழ்வரசி என்பது நெல்லைநாட்டு நல்வழக்கு.
திருவள்ளுவர், கணவனுக்குத் தலைமை தோன்ற மனைவியை வாழ்க்கைத் துணையென்று கூறியிருப்பினும், இல்லறத்தை "இருபகட் டொருசகடு" என்றும், கணவன் மனைவியர் காதலொற்றுமையை "ஓராவினுக் கிருகோடு தோன்றினாற்போல்" என்றும், உவமித்துக் கூறும் வழக்கிற்கும். இக்காலத் தோங்கிவரும் சமநிலைக் கருத்திற்கும் ஏற்ப, இருவரையும் தனித்தனி வாழ்க்கைத் துணையென்றோ, வாழ்க்கைத் துணைவன் வாழ்க்கைத் துணைவி என்றோ, குறிப்பது குற்றமாகாது. அன்பு காதல் காமம் என்பன, பருநோக்கில் ஒன்றாயினும், நுண்ணோக்கில் வேறுபட்டன. அன்பென்பது, ஏசுவும் புத்தரும் போல் எல்லாரிடத்தும் காட்டும் நேயம். அது அறமாகவும் அறவினைகட்கெல்லாம் காரணமாகவும் கருதப்படும். "அன்பிலா ரெல்லாந் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" (72) "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" | என்னும் குறள்கள் இதை யுணர்த்தும்.
|