'நாள் செய்வது நல்லார் செய்யார்' என்பது உண்மையாயின், நல்ல நாளில் மணப்பவரெல்லாம் நீண்ட வாழ்வினராயும், தீய நாளில் மணப்பவரெல்லாம் குறுகிய வாழ்வினராயும், இருத்தல்வேண்டும். அங்ஙனமின்மை வெளிப்படை. மேலும், ஒரு பெருவினை நன்னாளிலும் நல்வேளையிலும் தொடங்கப் பெறினும், தீயநாளிலும் தீயவேளையிலும் தொடர்ந்து செய்யப்படுவதையும் கவனிக்க. திருவருள் பெற்றோர் உடற்கட்டு, நல்லுணவு, உடற்பயிற்சி, அகமலர்ச்சி, கவலையின்மை, சினமின்மை, நல்லொழுக்கம், அறிவு டைமை, வரம்புகடவாமை முதலியவற்றாலேயே மக்கள் வாழ்நாள் நீடிக்கும் என்பதை அறிதல் வேண்டும். சித்திரை, வைகாசி, ஆனி, தை, பங்குனி ஆகிய ஐம்மாதங்களே திருமணத்திற்குரியனவாகக் கொள்ளப்படுதலின், இடையில் நிகழக்கூடிய பல திருமணங்கள் நின்றுவிடுகின்றன; அல்லது வீணாக நிறுத்திவைக்கப்படுகின்றன. மணவுறுதி செய்யப்பட்ட பின்பும் குறித்த கிழமையிலும் வேளையிலும் வராமையால் மணமகளையிழந்த மணமகனும், மணமகனையிழந்த மணமகளும் உளர். ஆகவே, உடல்நலத்தையும் வினைவசதியையும் தாக்கும் கோடை மாரிபோன்ற கால வேறுபாடும், பகல் இரவு போன்ற வேளை வேறு பாடும் அல்லது, வேறுவகையிற் காலப்பகுதிகளைக் கணித்து வீணாக இடர்ப்படுவதை விட்டுவிடல் வேண்டும். நகரங்களில் நடைபெறும் திருமணங்கட்கு வருவார் பலர் அலுவலாளரா யிருப்பாராதலால், அவர் வசதி நோக்கி, பொது விடுமுறையல்லாத நாள்களில் நடத்தும் திருமணங்களையெல்லாம், காலை 8 மணிக்கு முன் னாவது மாலை 4 மணிக்குப் பின்னாவது வைத்துக் கொள்வது நலம். (6) பிறப்பியம் பாராமை இனி, மணமக்களின் பிறப்பியத்தை (ஜாதகத்தை) நோக்குவதும் தவறாம். மனப்பொருத்தமே மணப்பொருத்தம். அஃதன்றிக் கணிய முறையில் வெவ்வேறு பொருத்தம் பார்ப்பதால், பொருந்தும் மணங்கள் விலக்கவும் பொருந்தா மணங்கள் பொருத்தவும் படுகின்றன. பிறப்பியக் கணிப்புப்படி பெரும்பால் நிலைமைகள் நேர்வதில்லை. ஏதேனும் நேரினும் அது தற்செயலாக நேர்வதே. பிறப்பியத் தவற்றைக் கணிப்புத் தவறென்று கூறுவதும் பொருந்தாது. சரியாய்க் கணிப்பவர் எவருமிலர். "ஐந்திற் கிரண்டு பழுதில்லா திருக்கும்" என்பதே எக் கணியர் கூற்றும். அவ் விரண்டுதான் எவையென்பதும் அவர் அறியார். பிறப்பியத்திற் குறிக்கப்பட்ட வாழ்நாள் நீட்சியை நம்பி, நோய் மருத்துவம் செய்யாதும் உடலைப் பேணாதும் இறந்துபோனவரும்; ஆக்க நிலையை நம்பி, முயற்சி செய்யாது வினைதோற்றாரும், முற்காப்பின்றி ஏற்கெனவே இருக்கும் நிலைமையுமிழந்தோரும் எண்ணிறந்தோராவர். |