பக்கம் எண் :

தமிழர் வரலாறு-135

முழுகிப் போன குமரிக்கண்டத்தைச் சேர்ந்த தமிழ்நிலம் முழுதும் பழம் பாண்டிநாடாகும். சோழநாட்டின் வடபகுதி தொண்டைமண்டலம் என்று பிரிந்தது போன்றே, சேரநாட்டின் வடபகுதியும் கொங்கு மண்டலம் எனப் பிரிந்தது. அக் கொங்கும் பின்னர்க் குடகொங்கு, குணகொங்கு என இருபாற்பட்டது. கொங்குநாட்டிலும் சோழநாட்டிலும் ஓடும் பேராறு காவேரி. அக் காவேரி பொன் கலந்த மணலைக் கொழித்ததனாற் பொன்னி யெனப்பட்டது.

சோழநாட்டில் மிகுதியாகப் பொன் கிடைத்ததனால், முதற் பராந்ததகன், இரண்டாங் குலோத்துங்கன் முதலிய சோழவேந்தர் பலர் தில்லைச் சிற்றம்பலம் பொன் வேய்ந்தனர். இரண்டாம் இராசராசன், சிற்றம்பலம் மட்டுமன்றிப் பேரம்பலம், மாடமாளிகை, கூடகோபுரம் முதலிய பலவற்றையும், பொன்னாலணிவித்துத் தில்லையைப் பொன்வண்ண மாக்கினான்.

"சிற்றம் பலமுந் திருப்பெரும்பே ரம்பலமும்
மற்றும் பலபல மண்டபமும் - சுற்றியே
மாளிகையும் பீடிகையும் மாடமுங் கோபுரமும்
சூளிகையு மத்தெருவுந் தோரணமும் - ஆளுடையான்
கோயில் திருக்காமக் கோட்டமு மக்கோயில்
வாயில் திருச்சுற்று மாளிகையும் - தூயசெம்
பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறும்பறுத்து
முன்னிற் கடல்களுள் மூழ்குவித்த சென்னி" 

-இராசராசதேவருலா

அரண்மனைகளில் அரசன் தங்கும் தனி மாளிகையும் பொன்னால் வேயப்பட்டிருந்தது. சுந்தரச் சோழனைப் "பொன் மாளிகைத் துஞ்சிய தேவர்" என்று கல்வெட்டுக் கூறுதல் காண்க.

கொங்குநாட்டிற் கிடைத்த பொன் கொங்குப்பொன் எனச் சிறப்பித்துக் கூறப்பட்டது. இன்றும் சுரங்கத்திற் பொன்னெடுக்கும் குவளாலபுரம் (கோலார்) பண்டைக் கொங்குநாட்டைச் சேர்ந்ததே.

"கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்" 

(சிலப்.10:13:2-5)

என்னும் சிலப்பதிகார நாடுகாண் காதை யடிகட்கு, "செந்நெற் கதி ரோடே அறுகையும் குவளையையும் கலந்து தொடுத்த மாலையை மேழியிலே சூட்டிப் பாரை இரண்டாகப் பிளப்பாரைப் போலப் போற்றுவார் தொழப் பொன்னேர் பூட்டி நின்றோர் ஏரைப் பாடும் ஏர் மங்கலப் பாட்டுமென்க" என்று அடியார்க்குநல்லார் உரை வரைந்துள்ளார்.