பக்கம் எண் :

முன்னுரை17

விளக்கு = வீட்டு விளக்குப்போற் சிறியது. விளக்கம் = கலங்கரை விளக்கம்போற் பெரியது.

முத்தம் என்னும் தென்சொல்லை வடமொழியாளர் முக்த என்று திரித்து, சிப்பியினின்று விடுதலை(முக்த) பெற்றதென்று வேர்ப் பொருட் கரணியங் கூறி வடசொல்லாகக் காட்ட முயல் வது, குறும்புத் தனமான குறிக்கோட் சொல்லியல் (Tendentious Etymology) ஆகும்.

முத்து என்பது, தமிழில் சிறிதாய் உருண்டு திரண்டிருக்கும் பல்வேறு பொருள்களைக் குறிக்கும்.

முத்து

1. கிளிஞ்சிலில் விளையும் மணிவகை.

"முறிமேனி முத்த முறுவல்" (குறள். 1113)

2. உருண்டு திரண்ட விதை.

எ-டு: ஆமணக்குவிதை

"முத்திருக்குங் கொம்பசைக்கும்" (தனிப்பா. 1 : 3 : 2)

3. உருண்டு திரண்ட ஆட்டக்காய்.

4. பெரியம்மைக் கொப்புளம்.

5. கண்ணீர்த்துளி

"பருமுத் துறையும்" (சீவக. 1318)

6. பனிநீர்த்துளி.

"முத்துநீர்ச் சாந்தடைந்த மூஉய்" (பரிபா. 10:13)

உருண்டு திரண்டிருக்கும் எண்ணெயுள்ள விதைகள் முத்தென்றே பெயர்பெற்றுள்ளன.

எ-டு :
ஆமணக்குமுத்து (முத்துக்கொட்டை,
கொட்டைமுத்து), குருக்குமுத்து, வேப்பமுத்து.

முத்துச்சம்பா, முத்துச்சோளம் என்பன உருண்டு திரண்டு முத்துப் போலிருப்பன. உருண்டு திரண்டுள்ள கோரைக்கிழங்கு முத்தக்காசு எனப்படுகின்றது.

முத்துக்குளிப்பு வரலாற்றிற்கெட்டாத தொன்றுதொட்டுப் பாண்டி நாட்டு மன்னார்குடாக் கடலில் நடை பெற்று வருகின்றது. முத்தூர்க் கூற்றம் என்று ஓர் ஆள்நிலப் பிரிவும் பழம்பாண்டி