மட்டும் எடுத்துக்கொண்டு, வேண்டாதவற்றை
விட்டுவிட்டனர், என்பது.
(5) தமிழ்ப்பெயர்ச்சொல்லின்
வேற்றுமையமைப்பு முற்றும் சமற்கிருத
வேற்றுமையமைப்பைப் பின்பற்றியது என்பது.
(6) தமிழில் சரியானபடி, செயப்பாட்டு
வினையே இல்லை என்பது.
(7) அரசன், ஆயிரம், உலகம், கணியம்,
சேரன், சோழன், திரு, நாழி, பாண்டியன், மனம்,
மாதம் என்பன வடசொற்கள் என்பது.
இனி, கால்டுவெலார் சில புலனங்களை
(விஷயங்களை) முன்னுக்குப் பின் முரணாகவும்
கூறியுள்ளார். எ-டு : மலையாளம் தமிழின் கிளைமொழி
(oldest offshoot)
என ஓரிடத்தும், உடன் பிறப்பு மொழி (sister
dialect) என மற்றோரிடத்தும்
கூறியிருத்தல்.
மேற்காட்டிய எழுவகைச்
சறுக்கற்கூற்றுகளும் உண்மைக்கு மாறானவையென்பது,
இந் நூலாலும் இதையடுத்துவரும் ஏனைய நூல்களாலும்
தெற்றெனத் தெரியவரும். தமிழைக் காய்தலின்றி
முதன்முதல் மொழிநூன் முறையில் ஆராய்ந்து ஓரளவு
பெருமைப் படுத்திய கால்டுவெலாரே இங்ஙனம்
கூறியிருப்பதனாலும், இவர் கருத்தே உலக முழுவதும்
பரவியுள்ள ஆங்கிலக் கலைக் களஞ் சியத்தில்
இடம்பெற்றிருப்பதனாலும், அயலாரும்
வெளிநாட்டாரும் தமிழின் பெருமையை அறியமுடியாது
போயிற்று. இவர் நூல்முழுதும் நோக்கின், தமிழ்
நாகரிகத்திற்கு ஆரியம் அடிப்படை என்னும் தவறான
கருத்து, இவர் உள்ளத்தில் ஏற்கெனவே ஆழ
வேரூன்றியிருந்ததைக் காணலாம், சமற்கிருதத்தில்
திரவிடச் சொற்கள் உள என முதன்முதல் இவர்க்குக்
கண்திறந்தவர், மலையாள மொழியாராய்ச்சியில்
ஈடும் எடுப்புமற்ற குண்டர்ட்டு என்னும் செருமானியக்
கிறித்தவக் குரவரே. ஆயினும் கால்டு வெலார்
பகைமைக் கண்கொண்டு தமிழை நோக்கியவரல்லர்
என்பது, அனைவர்க்கும் ஒப்ப முடிந்த உண்மையாம்.
எனினும், அவர் ஆராய்ச்சியின் குணமுங் குற்றமும்
நாடின், குற்றமே மிகுந்த தென்பது தெளிவு. ஆதலால்
அஃது எக்காலத்திற்கும் ஏற்குமென்பது அறியார்
கூற்றே. அது இன்று பழமைப்பட்டும் பழுதுபட்டும்
போயிற்றென்பது இந் நூலால் விளங்கும்.
9. திரவிடமொழிப் பகுப்பு
தென்னிந்திய மொழிக்குடும்பத்தைக்
கால்டுவெல் கண்காணி யார் முதன்முதலாக
ஆராய்ந்ததினால், தமிழையும் அதனொடு தொடர்புள்ள
பிற மொழிகளையும் வேறுபடுத்தாது, திரவிடம்
என்னும் ஒரே பெயராற் குறித்தார். ஆயின், இன்று
தெலுங்கு கன்னட
|