பெயரீட்டை மிகப் பிந்திய நிகழ்ச்சியாகக்
காட்டுவதால், அதுவும் கொள்ளத் தக்கதன்று.
மூவினமெய் எல்லா மொழிகட்கும்
பொதுவாதலின், தமிழ் என்னும் பெயர் அது குறித்துத்
தோன்றிற்றென்பதும் தவறானதே.
எல்லா மொழியாளரும் தத்தம் மொழியே
இனியதென்று கொள்வது இயல்பாதலானும்; மாடு என்னும்
சொற்குச் செல்வம் என்னும் பொருள்
தோன்றியதுபோல், தமிழ் என்னும் சொற்கு இனிமை
என்பது மதிப்பும் பற்றும் பற்றித் தோன்றிய
வழிப் பொருளே யாதலானும்; தம்+இம்(இழும்) என்னும்
சொற் பகுப்பில், ‘தம்‘ என்னும் முன்னொட்டு
தொடர்பற்றும், இழும் என்னும் தலைமைச் சொல்
ஈறாகக் குன்றியும், இருக்கவேண்டும் நிலைமை
யேற்படுதலானும்; இனிமைப் பொருட் கரணியமும்
ஏற்றதன்றாம்.
இழும் = இனிமை. இழுமெனல் =
இனிதாயிருத்தல்.
இழுது = தேன், தித்திப்பு.
தனிமையாக ழகரத்தைக்
கொண்டதென்னுங் கருத்துப் பொருத்தமுள்ளதாகத்
தோன்றினும், அதுவும் ஏனை மொழி களுடன் ஒப்பு
நோக்குதலை வேண்டுதலின் ஏற்கத்தக்க தன்று. கி.மு.
10,000 ஆண்டுகட்கு முன்னரே குமரிக்கண்டத்தில் தமிழ்
என்னும் பெயர் ஏற்பட்டு விட்டது.
தமிழ் என்னும் சொல்லில் ‘ழ்‘
இயல்பீறன்று. அமிழ், இமிழ், உமிழ், குமிழ்,
சிமிழ் என்பவற்றிற்போல், தமிழ் என்பதிலும்
‘இழ்‘ என்பதே ஈறாம். அது ‘இல்‘ என்பதன் திரிபு.
தனிமையாக ழகரத்தைக் கொண்டதென்னும் பொருளில்,
தமிழ் என்பது தமி+ழ் என்று பிரிதல் வேண்டும். தமி
= தனிமை. ழகரம் இனிதாயொலிப்ப தால், தனிமையாக
ழகரத்தைக் கொண்டதென்னுங் கூற்றும், இனிமைக்
கருத்தைத் தழுவியதே.
இனி, இனிமையென்பது தமிழுக்கு
ழகரத்தால் மட்டும் ஏற்பட்டதன்று. எழுத்தினிமை
போன்றே, சொல்லினிமை, செய்யு ளினிமை எனப்
பிறவினிமைகளுமுண்டு. இவற்றின் விரிவையும்
விளக்கத்தையும் என் ‘செந்தமிழ்ச் சிறப்பு’,
‘முத்தமிழ்‘ என்னும் நூல்களிற் கண்டு கொள்க.
"சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்
பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலி
னாய்ந்தவொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி
யேழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்
கொலாம்புகுந் தெய்தியதே"
என்னும் திருக்கோவைச்
செய்யுளில்,
‘ஒண்டீந்தமிழின்
துறை‘ என்று பிறமொழிகட்கில்லாத
பொருளிலக்கணமும், "ஏழிசைச் சூழல்"
|