தமிழ வணிகர் வடக்கிலுள்ள
மொழிபெயர் நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அந்
நாட்டார் அவ் வணிகர் பேச்சைத் தம்மில்
(தம்+இல்) மொழி என்று குறித்திருக்கலாம். இல்
என்பது வீட்டையுங் குடியையும் ஊரையும் உணர்த்தும்.
இற்பிறந்தார் (குறள். 915) = குடிப்பிறந்தார்.
அன்பில், கிடங்கில், பொருந்தில்
என்பன ஊர்ப் பெயர்கள். ஊர், நாடு என்பன
ஒன்றையொன்றுணர்த்தலு முண்டு. நாட்டாண்
மைக்காரன் என்பவன் ஊராண்மைக்காரன்.
ஆள்மறைநாடு, உரத்தநாடு, பைங்காநாடு என்பன ஊர்ப்
பெயர்கள்.
தம் இல் மொழியாவது தம் வீட்டில்
அல்லது நாட்டில் பேசும் மொழி. தம்மில் என்பது
தமில் எனத் தொக்குத் தமிழ் எனத்
திரிந்திருக்கலாம். வெய்யில் என்பது வெயில்
எனத் தொக்கு வழங்குதலை நோக்குக. தமிழ் என்னும்
வடிவு ஒருசொற்றன்மைப் பட்டு, தமிழ் என்னும்
திரிபில் மொழிப் பெயர்த் தன்மை முற்றி
விட்டது.
"குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை
நாட்டே" (குறுந். 11::5-8)
"மொழிபெயர் பன்மலை யிறப்பினும்
ஒழிதல் செல்லா தொண்டொடி
குணனே." (ஐங். 321:4-5)
"தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை
யிறந்தே" (அகம். 31:14-15)
"பனிபடு சோலை வேங்கடத் தும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
நல்குவர்" (அகம்.211:7-8)
என்னும் கடைக்கழகச் செய்யுட்
பகுதிகள். தமிழ வணிகரின் வடதிசை மொழிபெயர்
தேயச் செலவைக் கூறுதல் காண்க. தெலுங்கென்னும் வடுகு
முதற்காலத்தில் தமிழினின்றும் மிக
வேறுபட்டிருக்கமுடியாது. "வேங்கடத் தும்பர்
மொழிபெயர் தேயம்" என்றது வடுகநாட்டையே
என்பது தெளிவுறு தேற்றம். தாம் என்பது தாமு என்றும்,
தம் என்பது தம என்றும், தம்பின் என்பது தம்முடு
என்றும், இல் என்பது இல்லு என்றும், இன்றும்
தெலுங்கில் வழங்குவதால், தம்மில் அல்லது தமில்
என்னும் கூட்டுச் சொல் அக்கால வடுகிற்கு முற்றும்
இயல்பானதே.
அலர்மேல்மங்கை என்னும்
தொடர்ச்சொல் பின்னர் அலர்மேல் என்று குறுகி
வழங்குவதுபோல், தமில்மொழி என்பதும்
|