முதற்காலத்தில் நாவலம் பொழில்
முழுதும் மூவேந்தர் ஆட்சிக் குட்பட்டிருந்தமை,
"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல்
கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும்
கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன்
வாழி!"
(சிலப். நாடுகாண் காதை, 19-22)
"இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன்
............................
புண்ணியத் திசைமுகம் போகிய
அந்நாள்
அசைவில் ஊக்கத்து நசைபிறக்
கொழியப்
பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென
இமையவர் உறையுஞ் சிமையப்
பிடர்த்தலைக்
கொடுவரி யொற்றிக் கொள்கையிற்
பெயர்வோன்"
(சிலப். இந்திர விழவூரெடுத்த காதை, 88-97)
"குமரியொடு வடவிமயத்து ஒருமொழி
வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி
ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்
கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப்
பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன்"
(சிலப். வாழ்த்துக் காதை, உரைப்பாட்டு
மடை)
என்னும் பகுதிகளால் உய்த்துணரப்படும்.
ஆரியர் வருமுன் வடநாடு முழுதும் திரவிடர்
பரவியிருந்தமையும், சில வடநாட்டூர்ப் பெயர்
தமிழாயிருத்தலும் இதை வலியுறுத்தம்.
தெற்கே முழுகிப்போன குமரிக்கண்டம்
முழுதும் பழம் பாண்டி நாடே. அது ஏறத்தாழ ஈராயிரம்
கல் தொலைவு நீண்டது. இதேயளவு வடக்கில்
கீழ்ப்பகுதி சோழநாடாகவும் மேற்பகுதி
சேரநாடாகவும் இருந்ததாகத் தெரிகின்றது. கண்ணன்
அழித்ததாகச் சொல்லப்படும் சோணிதபுரம் பழஞ்
சேரநாட்டைச் சேர்ந்ததே. அது மாவலி என்னும் சேர
மாவேந்தனின் மகன் வாணனது தலைநகர்.
தமிழ வேந்தர் என்றும் மூவரேயாதலின்,
அவர் முச் சுடரையும் தம் குலமுதலாகக்
கூறிக்கொண்டனர். பாண்டியன் திங்கட்குலமும்,
சோழன் கதிரவக் குலமும், சேரன் நெருப்புக் குலமும்
ஆவர். பாரதத்திற் சொல்லப்படும், திங்கள்
மரபாகிய பரத குலம் பழம் பாண்டியக் கிளையும்,
இராமாயணத்திற் சொல்லப்படும் கதிரவக்
|