பக்கம் எண் :

50தமிழ் வரலாறு

எ-டு:

காரோதிமத்தைக் காண்பது அரிது.-அருமை

மாந்தன் பறப்பது அரிது.-இயலாமை

இயலாமைப் பொருளுணர்த்தும் கூடாது என்னுஞ் சொல், விலக்குப் பொருளில் வருவதுபோன்றே, அரிது என்னும் சொல்லும் வரும். அரிது என்பது மலையாளத்தில் அருது எனத் திரியும்.

மழையத்துப் போகருதெ, வெயிலத்துப் போகருதெ என்பன, மழையிற் போகாதே, வெயிலிற் போகாதே என்று பொருள்படும் மலையாள(சேர) நாட்டு வழக்காம்.

"ஆர்க்கானும் கொடுக்கும்போழ் அருதென்று விலக்கருது" என்னும் மலையாளப் பழமொழியில், "அருதென்று விலக்கருது" என்னும் தொடர், கூடாதென்று தடுக்கக் கூடாது என்று பொருள் படுதல் காண்க.

கூடாது என்னும் சொற்போன்றே. அருது என்பதும் மலையா ளத்தில் தனிவினையாக வரும்.

எ-டு: ஈ ஆள்க்கு வேறே பணி அருது = இந்த ஆளுக்கு வேறு வேலை கூடாது.

போகருதெ என்னும் மலையாள வினையொடு போகாதே என்னும் தமிழ்வினையை ஒப்புநோக்கும்போது, அருது என்பது ஆது என்று மருவினதாகத் தெரிகின்றது. இதினின்று, செய்யரியேன், செய்யரியேம், செய்யரியாய், செய்யரியீர், செய்யரியான், செய்யரி யாள், செய்யரியார், செய்யரிது, செய்யரிய என்னும் வடிவங்கள், முறையே செய்யேன், செய்யேம், செய்யாய், செய்யீர், செய்யான், செய்யாள். செய்யார், செய்யாது, செய்யா எனத் தொக்கன என எண்ண இடம் ஏற்படுகின்றது. அரிது என்பதன் மூவமான அருமைச்சொற்கு இன்மைப் பொருளுண்மையும், இயலாமைப் பொருளுணர்த்த வேண்டிய செய்யக்கூடாது என்னும் சொல் செய்யாதே என்று பொருள்படுவதும், இவ் வெண்ணத்தை வலியுறுத்துகின்றன.

படர்க்கை யெதிர்மறை யேவற் பன்மை யீறு

அல்+மார் எ-டு: செய்யன்மார்.

"பாடின் மன்னரைப் பாடன்மார் எமரே." (புறம்.375)

"நோய்மலி வருத்தங் காணன்மார் எமரே." (நற். 64)

மார் என்பது செய்மார் என்னும் பலர்பால் எதிர்கால வினை முற்றீறாம்.