கல்வியைப் பரப்புவது அரசன் கடமையாதலாலும்,
பாண்டிய வேந்தர் சிலரும் நல்லிசைப்
புலவராயிருந்ததினாலும், காய்சின வழுதி என்னும்
பாண்டியன், பஃறுளியாற்றங்கரையிலிருந்த மதுரை
என்னும் தன் தலைநகரில், தலைமைப்
புலவரையெல்லாம் கூட்டி ஒரு தமிழ்க்கழகம்
நிறுவினான். அக் கழகப்புலவர், பழைய இலக்கி
யத்தை ஆராய்வதும் புதிய நூல்களையும் வனப்புகளையும்
பாடல்களையும் இயற்றுவதும், தம் தொழிலாகக்
கொண்டிருந் தனர். புதிய இயற்றல்களெல்லாம்
பாண்டியன் முன்னிலையில் அரங்கேற்றப்பெற்றே
ஆட்சிக்கு வந்தன.
அற்றைத் தமிழகத்தில் ஆரியருமில்லை;
ஆரியச் சொல்லோ கருத்தோ கலந்த நூலுமில்லை.
இன்னிசைக்கலையும் நாடகக்கலையும்
நல்வளர்ச்சி யடைந்திருந்தமையால், மொழியொடு
இசைக்கும் நடிப்பிற்குமுள்ள நெருங்கிய தொடர்பு
கருதியும், இசைப்பாட்டுகளெல்லாம் செய்யுள்
வகையாயிருத்தல் பற்றியும், இசையும் நாடகமும்
மொழியொடு சேர்க்கப்பெற்று, இயலிசை நாடகமெனத்
தமிழ் முத்தமிழாய் வழங்கிவரலாயிற்று.
இயற்றமிழை மட்டும் கூறும் இலக்கணம் பிண்டம்
என்றும், முத்தமிழையும் கூறும் இலக்கணம்
மாபிண்டம் என்றும் பெயர்பெற்றன.
|