4. இடைக்கழகம் (தோரா. கி. மு. 4000-1500)
தலைக்கழகம் அழிந்து ஏறத்தாழ 500
ஆண்டுகட்குப்பின், குமரியாறு கடலொடு கலந்த
இடத்தில், அலைவாய் என்றோ கயவாய் என்றோ,
கதவம் என்றோ புதவம் என்றோ பெயர் பெற் றிருந்த
துறை நகரில், வெண்டேர்ச்செழியன் என்னும்
பாண்டியன் இடைக்கழகத்தை நிறுவினான். அன்றும்
ஆரியருமில்லை; ஆரியக் கலப்புள்ள நூலு மில்லை.
இடைக்கழக இருக்கையைக் கபாடபுரம்
என்று வடமொழி யிலக்கியம் கூறும். மதுரையை
மதுராபுரி என்று விரித்தல்போல், கபாடத்தையும்
கபாடபுரம் என்று விரித்திருக்கலாம். கதவம்
என்பது பெயராயின், கபாட என்பது
இலக்கணப்போலித் திரிபாம்; அலைவாய் அல்லது
கயவாய் என்பது பெயராயின், கபாட என்பது
அரைப்பெயர் மொழிபெயர்ப்பாம்; புதவம் என்பது
பெயராயின், அது முழுப்பெயர் மொழிபெயர்ப்பாம்.
காவிரிப்பூம்பட்டினம் புகார் (ஆறு கடலிற்
புகுமிடம்) என்று பெயர்பெற்றிருந்தமையும், கெடிலம்
கடலொடு கூடுமிடம் கூடலூர் என்று பெயர் பெற்றுள்ள
மையும் நோக்குக.
5. கொடுந்தமிழும் திரவிடமும்
ஒருகாலத்தில் கொடுந்தமிழ்
என்றிருந்த திசைமொழிகள் (Re-gional
Dialects ), பிற்காலத்தில் திரவிடம்
என்னும் கிளைமொழி களாய்த் திரிந்துவிட்டன.
தமிழர் அறிய, முதலாவது திரிந்த கிளை மொழி
தெலுங்கே. அது திரிந்த காலம் ஏறத்தாழக் கி.மு. 1500.
தெலுங்கு நாட்டிற்குத் தெற்கே நீண்ட காலமாய்த்
தமிழொன்றே வழங்கி வந்தது.
"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து"
என்று தொல்காப்பியர் காலப்
பனம்பாரனார் கூறியது போன்றே,
"நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமுந்
தமிழ்வரம் பறுத்த தண்புனல்
நன்னாட்டு" (சிலப்.
8:1,2)
என்று இளங்கோவடிகளும், கடைக்கழகக்
காலம்வரை வேங்கடத் திற்குத் தெற்கில்
தமிழ்தவிர வேறெம்மொழியும் வழங்காதிருந்
தமையைக் குறித்தல் காண்க.
இனி, திரவிடமும், (1) வடதிரவிடம், (2)
நடுத்திரவிடம், (3) தென்திரவிடம் என
முத்திறப்படும். இவற்றை முன்திரவிடம்,
இடைத்திரவிடம், பின்திரவிடம் என்றும்
அழைக்கலாம்.
|