பக்கம் எண் :

122தமிழ் வளம்

ஏழிசையிற் கிளையாய்ந்து வகுத்ததே என்றும், பேரிசைகளே அமைந்த ஏழிசை முறையும், பேரிசையும் சிற்றிசையும் கலந்த பன்னீரிசை முறை யும் இவற்றின் இடைவெளிகளான இருபத்தீரலகு முறையும் தொன்று தொட்டுவரும் தமிழிசை மரபேயென்றும், தம் 'பழந்தமிழிசை'யில் வலியுறுத்தியுள்ளார்.

     பொறுப்பு வாய்ந்த உயர்பதவித் தமிழாசிரியரெல்லாம் ஊமைய ராயும் செவிடராயும் "எங்கெழிலென் ஞாயிறெமக்கு" என்றிருக்கும் இக்காலத்தில், ஓய்வு பெற்ற அரசிய லதிகாரியார் ஒருவர், வெம்பாலைத் தண்சோலையும் கடும் பஞ்சத் திடிமழையும்போல எதிர்பாராதவகையில் இசைத்தமிழை இங்ஙனங் காக்கத் துணிந்தது, இறைவன் ஏற்பாடே என்பது என் கருத்து.

     படிக்கத்தெரிந்த உண்மைத் தமிழன்பரெல்லாம் இவரது 'பழந் தமிழிசை'யைத் தப்பாது வாங்கிப்படித்துப் பயன்பெறுக; இவர் கண்ட உண்மைகளைப் பாரெங்கும் பரப்புக. இன்னும் தொடர்ந்தாய்ந்து இது போன்ற பல அரிய ஆராய்ச்சி நூல்களை ஆக்குமாறு, இறைவன் இவர்க்கு நலத்தொடும்

வலத்தொடும் நெடுவாழ்வருள்க!

20.3.1959

கல்லூரித் தமிழிலக்கணத் தெளிவு

     சேலம் அம்மாப்பேட்டைவாணரும் என் தொல்காப்பிய மாண வருமான புலவர் சு.கு. அருணாசலனார். க.த., (M.A.) கீ. க.இ. (B.O.L.), கலையிளைஞன் (B.A.), அறிவியல் இளைஞன் (B.Sc.) ஆகிய இரு தேர்வுப் பாடத்திட்டத்தை யொட்டி, கலையிளைஞன் சிறப்புத் தமிழ் மாணவர்க்கும் கலைத்தலைவன் (M.A) தமிழ் மாணவர்க்கும் பயன்படு மாறு, முதன் முதலாய் வரைந்துள்ள 'கல்லூரித் தமிழிலக்கணத் தெளிவு' என்னும் நூலைப் பார்வையிட்டேன். ஓரிரு சிறு குறைகளிருப்பினும் இது பெரிதும் போற்றத்தக்கதாகும்.

     உலகில் முதன்முதலாய் இலக்கண நூல் எழுந்தது தமிழே. இன்றும், எழுத்து, சொல், பொருள் என்னும் முப்பாற்பட்ட முழுநிறை விலக்கணம் உள்ளதும் தமிழே. தமிழின் பிறந்தகமான குமரிக்கண்டம் மூழ்கிப் போனமையாலும், ஆரிய வருகைக்கு முற்பட்ட தனித்தமிழி லக்கியம் முற்றும் இறந்துபட்டமை யாலும், தமிழின் உண்மை வரலாறு மறையுண்டு கிடப்பதாலும், தமிழின் முன்மையையும் தொன்மையையும் நடுநிலை வாய்ந்த மேலையறிஞரும் அறியும் நிலைமையில்லை இனி, இவற்றொடு இற்றைத் தமிழரின் குமுகிய (சமுதாய)த் தாழ்வும், தொல்காப்பிய கடைக்கழக விலக்கியப் பயிற்சியின்மையும், கால்டுவெல் கண்காணியாரை, தமிழ் நெடுங்கணக்கும் வேற்றுமையமைப்பும் சமற் கிருதத்தைப் பின்பற்றியவையென்று தலைகீழாக மாற்றிக்கூறச் செய்துவிட்டன.

நெடுங்கணக்கு

     தமிழொலிகள் இயல்பானவும் மெல்லியனவுமாய் வடமொழி யொலிகளினும் வேறுபட்டவையென்பது, செவிப்புலனுள்ள எவர்க்கும் தெளிவாம். ஆரியர் நாவலந் தேயத்திற் கால்வைத்தபோது, அவர்மொழி இலக்கியமற்றதும் எழுதாக்