பக்கம் எண் :

மதிப்புரை மாலை123

கிளவியுமாயிருந்தது. அவர் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே, தமிழ் முத்தமிழிலக்கணமும் பல்துறை யிலக்கியமும் கொண்டிருந்தது. தமிழெழுத் திலக்கணம் பன்னிரண்டனுள், முறை என்பதும் ஒன்று. இது மேலையாரிய மொழி கட்கும் ஏனை மொழிகட்கும் இன்றுமில்லை. ட, ண, ள, என்னும் வருடொலிகள் (Linguals or cerebrals) சமற்கிருதத்திற்கு முந்திய வேத ஆரியமும் தமிழினின்று கடன் கொண்டனவே. இதுபோதுள்ள பழந்தமிழ் நூலான தொல்காப்பியமும் சமற்கிருத விலக்கணமான பாணினீயத்திற்கு முந்தியதே. பாணினீயத்திற்கு முந்திய ஐந்திரம் என்னும் வடமொழி யிலக்கணமும், தமிழ்நாட்டில் தமிழிலக்கணத்தைப் பின்பற்றி யெழுந்ததே. ஆதலால், வடமொழி நெடுங்கணக்கே தமிழைப் பின்பற்றி யமைந்ததென உண்மையறிக.

வேற்றுமையமைப்பு

     இனி, தமிழ்வேற்றுமை எட்டும் இயற்கையாகவும், ஏரண முறைப் பட்டும், தனித்தனி வேறுபட்ட பொருளுடையனவாகவும், இருக்கின்றன. அஃதோடு, மூவேறு வகையில் பெயர் கொண்டும் உள்ளன. எண் வகையில், முதல் வேற்றுமை, 2ஆம் வேற்றுமை, 3ஆம் வேற்றுமை, 4ஆம் வேற்றுமை, 5ஆம் வேற்றுமை, 6ஆம் வேற்றுமை, 7ஆம் வேற்றுமை, 8ஆம் வேற்றுமை என்றும்; பொருள் வகையில், எழுவாய் வேற்றுமை, செய்பொருள் வேற்றுமை, கருவி வேற்றுமை, கொடை வேற்றுமை, நீக்க வேற்றுமை, கிழமை வேற்றுமை, இட வேற்றுமை, விளி வேற்றுமை, என்றும்; உருபு வகையில், பெயர் வேற்றுமை, ஐ வேற்றுமை, ஒடு வேற்றுமை, குவ்வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை, கண் வேற்றுமை, விளி பெயர் (விளிக்கப்படும் பெயர்) வேற்றுமை என்றும், பெயர் பெற்றிருத்தல் காண்க.

     வடமொழியிலோ, பிரதமா விபத்தி, துவிதீயா விபத்தி, திருதீயா விபத்தி, சதுர்த்தீ விபத்தி, பஞ்சமீ விபத்தி, சட்டீ விபத்தி, சத்தமீவிபத்தி, சம்போதனப் பிரதமா விபத்தி, என எண்பற்றியே எண்வேற்றுமையும் பெயர் பெற்றுள்ளன.

     3ஆம் வேற்றுமைப் பொருள்களான கருவி, வினைமுதல் (கருத்தா) உடனிகழ்ச்சி ஆகிய மூன்றும் முரண்பட்டவை என்று கால்டு வெலார் கருதுகின்றார். அம் மூன்றையும் ஆய்ந்து நோக்குவார்க்கு, அவற்றின் ஒற்றுமை தோன்றாமற் போகாது. வினைமுதல் என்பது உயர்திணைக் கருவியாதலால், கருவியுள் அடங்கும். இனி, கருவியுள் உடனிகழ்ச்சியும் உடனிகழ்ச்சியுட் கருவியும் நுண்ணிதாய்க் கலந்து கிடப்பதை, நுண்மாண் நுழைபுலங் கொண்டும் வழக்கு நோக்கியும் உணர்ந்தே, அவ்விரண்டையும் ஒரு வேற்றுமைப்படுத்தினர் தமிழ் முதனூலாசிரியர். ஒரு கருவி கொண்டு ஒரு வினை செய்யும்போது அக் கருவி செய்வானுட னிருப்பதையும், ஒருவன் மற்றொருவனுடன் கூடி ஒரு வினை செய்யும்போது, அம் மற்றொருவன் துணையாய்நின்று கருவிப்படுவதையும், கூர்ந்து நோக்குக.