பக்கம் எண் :

156தமிழ் வளம்

29
பிறந்த நாட் செய்தி
(தமிழ்நாட்டுத் தந்தை ஈ.வே.இரா.பெரியார் அவர்கட்கு
ஞா.தேவநேயன் எழுதுவது: வேண்டுகோள்.)

     இந்துமாவாரியில் மூழ்கியுள்ள குமரிக்கண்டத் தென்கோடியில் கி.மு.50,000 (ஐம்பதினாயிரம்) ஆண்டுகட்கு முன்பே முழுவளர்ச்சி அடைந்த தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழியும் திரவிடத் தாயும் ஆரிய மூலமும் ஆகும். தேவமொழியென்று ஏமாற்றித் தமிழகத் திற் புகுத்தப்பட்ட சமற்கிருதம் என்னும் வடமொழியாலேயே தமிழ் தாழ்த்தப்பட்டது. அதனால் தமிழனும் தாழ்த்தப்பட்டான். தமிழன் மீண்டும் முன்னேறுவதற்குத் தமிழ் வடமொழியி னின்றும் விடுதலை யடைதல் வேண்டும். வடமொழியினின்று தமிழை மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள். தமிழ் உயர்ந்தால்தான் தமிழன் உயரமுடியும். அதற்குத் தமிழர் இனி எல்லா வகையிலும் தமிழையே போற்றுதல் வேண்டும். முதற்கண் தமிழர் அனைவரும் தமிழ்ப் பெயரே தாங்கல் வேண்டும். ஆண்டில் ஒரு நாளைப் பெயர் மாற்றத் திருநாள் என்று இனி ஆண்டுதொறும் கொண்டாடி வருவது நன்று. பிறந்த அண்மையிற் பிறமொழிப் பெயர் பெற்றவரெல்லாரும் அந் நாளில் தம் பெயரைத் தனித் தமிழ்ப் பெயராக மாற்றிக்கொள்ளலாம். அதை இல்லத்தில் விழாவாகக் கொண்டாடுவதுடன் ஊர்வலத்தாலும் ஊரார்க்கறி விக்கலாம்.

     தமிழ்ப்பெயர் தாங்குபவரே உண்மைத் தமிழராவர். தமிழ்ப் பெயர் ஏற்றபின் தமிழிலேயே திருமணத்தையும் இருவகைச் சடங்கு களையும் செய்தலும் செய்வித்தலும் வேண்டும். கடவுள் நம்பிக்கை யுள்ளவர் திருவழிபாட்டையும் தமிழிலேயே ஆற்றுதல் வேண்டும்.

     இங்ஙனம் தொடர்ந்து செய்துவரின் இன்னும் ஐந்தாண்டிற்குள் தமிழர்தம் அடிமைத்தனமும், அறியாமையும் அடியோடு நீங்கி மேலையர்போல் புதுப்புனைவு தலைப்படுவர் என்பது திண்ணம்.
     ஆங்கிலர் நீங்கியதால் தமிழ்நாடு விடுதலையடையவில்லை. ஆரியம் நீங்குவதே உண்மையான தமிழர் விடுதலையாம்.