பக்கம் எண் :

61

4
தமிழ் அகரமுதலித் தொகுப்பாளர் தகுதி

     எந்த மொழியிலேனும், கல்வி வேறு ஆராய்ச்சி வேறு என்பதை முதற்கண் அறிதல் வேண்டும். கல்வி எத்தனை துறைப்பட்டதோ அத்தனை துறைப்பட்டது ஆராய்ச்சியும். பலர் கற்றுத் தேர்வெழுதியோ ஆராய்ந்து இடுநூல் (thesis) விடுத்தோ ஒரே வகையான அல்லது பெயருள்ள பட்டம் பெறினும், அவர் அறிவு அல்லது புலமை ஒன்றாக அல்லது பொதுவாக இராது; அவர் கற்ற அல்லது ஆராய்ந்த துறைக்குத் தக்கவாறு வேறுபட்டுச் சிறப்பாகவே யிருக்கும்.
     ஒரு பள்ளியில் அல்லது கல்லூரியில், பல ஆசிரியர் இளங்கலைப் (B.A.) பட்டமோ முதுகலைப் (M.A.) பட்டமோ பெற்றவராயிருக்கலாம். ஆயின், அவரெல்லாரும் ஒரே பாடங் கற்பிக்குந் திறமையுள்ளவராய் ஒருதிறப்பட்டிராது. பல்வேறு பாடங் கற்பிக்குந் திறமையராய்ப் பல்திறப் பட்டிருப்பர். வரலாற்றுப் பட்டந் தாங்கியார் கணிதமும், கணிதப் பட்டந் தாங்கியார் அறிவியலும், கற்பிக்க முடியாது. அங்ஙனமே, பண்டாரகர்ப் (Dr) பட்டந்தாங்கியாரும் தத்தம் ஆராய்ச்சித் துறையிலேயே அறிவும் ஆற்றலும் உடையவராயிருப்பர்.

     ஒரு தலைமையாசிரியர் அல்லது முதல்வர் அல்லது அமைச்சர் அல்லது பல்கலைக்கழகத் துணைக்கண்காணகர் ஒரு துறையிற் பட்டம் பெற்ற ஆசிரியரை மற்றொரு துறைக்கு அமர்த்துவது,

     

"எமக்கென வகுத்த வல்ல மிகப்பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே யதுகண்
டிலம்பா டுழந்தவென் இரும்பே ரொக்கல்
விரற்செறி மரபின செவித்தொடக் குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்
கடுந்தெறல் இராமனுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாஅங்கு
அறாஅ வருநகை யினிது பெற்றிகுமே"                (புறம் 378)

என்றாற் போன்ற நிலைமையை உண்டுபண்ணுவதே.