பக்கம் எண் :

112தமிழ்நாட்டு விளையாட்டுகள்

(2) இரவாட்டு

1. கண்ணாம்பொத்தி

     ஆட்டின் பெயர் : ஒருவர் ஒரு பிள்ளையின் கண்ணைப் பொத்திக் கொண்டிருக்கும்போது, பிற பிள்ளைகள் ஓடி ஒளியும் விளையாட்டுக் கண்ணாம்பொத்தி எனப்படும்.
     ஆடுமுறை : முதியார் ஒருவர், ஆட விரும்பும் பிள்ளைகளை யெல்லாம் ஒருங்கே இருத்திக்கொண்டு, ஒவ்வொருவரையும் சுட்டி ஒரு மரபுத் தொடரைச் சொல்லி, அத் தொடரின் இறுதிச் சொல்லாற் குறிக்கப்பெறும் பிள்ளையின் கண்ணைப் பொத்துவர். இனி, முதியார் ஒருவர்மீது எல்லாப் பிள்ளைகளும் படபடவென்று கையாலடிக்கும்போது, அம் முதியாரின் கையில் அகப்பட்டுக் கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்துவதுமுண்டு. பொத்தும் போது, மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடி ஒளிந்து கொள்வர்.
     முதியார் அகப்பட்டுக்கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்திக்கொண்டிருக்கும்போது, அவ் விருவருக்கும் பின்வருமாறு உரையாட்டு நிகழும்.
   முதியவர் : கண்ணாம் பொத்தியாரே கண்ணாம் பொத்தியாரே!1
   பிள்ளை : என்ன?
   மு : எத்தனை முட்டையிட்டாய்?2
   பி : மூன்று முட்டையிட்டேன்.
 

1. 'கண்ணாம் பொத்தியாரே' என்பது கொச்சை வடிவில் 'கண்ணாம்பூச்சியாரே' என்று திரியும்.
2. விளி உயர்வுப் பன்மையிலிருப்பினும், பயனிலை ஒருமையாகவே யிருக்கும். இது வழுவே.