பக்கம் எண் :

தமிழ்நாட்டு விளையாட்டுகள்113

   மு : அவற்றுள் ஒரு முட்டையைப் பொரித்துத் தின்று விட்டு, ஒரு       முட்டையைப் புளித்த தண்ணீருக்குள் போட்டுவிட்டு, ஒரு முட்டையைப் பிடித்துக் கொண்டுவா.
     புலா லுண்ணாதாராயின், இவ் வுரையாட்டில் விளிக்குப் பிற்பட்ட வினா, விடை, ஏவல் பின்வருமாறிருக்கும்.
   மு : எத்தனை பழம் பறித்தாய்?
   பி : மூன்று பழம் பறித்தேன்
   மு : அவற்றுள் ஒரு பழத்தைப் பிள்ளையாருக்குப் படைத்துவிட்டு, ஒரு பழத்தை அறுத்துத் தின்றுவிட்டு, ஒரு பழத்தைப் பிடித்துக் கொண்டுவா.
   இனி, மேற்கூறியவாறு உரையாட்டின்றி,
        கண்ணாங் கண்ணாம் பூச்சி!
        காட்டுத்தலை மூச்சி
        ஊளை முட்டையைத் தின்றுவிட்டு
        நல்ல முட்டை கொண்டுவா
என்று ஏவுங் கொங்குநாட்டு வழக்கும் உளது.
     இங்ஙனம் ஏவப்பட்ட பிள்ளை, உடனே ஓடிப்போய் அங்குமிங்கும் பார்த்து ஒளிந்துகொண்டிருக்கும் பிள்ளைகளுள் ஒருவரைத் தொடமுயலும். முதலாவது தொடப்பட்ட பிள்ளை அடுத்தமுறை கண் பொத்தப்படும். தொடப்படுமுன் ஓடிவந்து முதியாரைத் தொட்டுவிட்டால், பின்பு தொடுதல் கூடாது. ஒருவரும் தொடப்படாவிடின், முன்பு கண்பொத்திய பிள்ளையே மறுமுறையுங் கண்பொத்தப்படும்.
     ஆட்டுத் தோற்றம் : பள்ளிக்குச் செல்லாது ஒளிந்து திரியும் திண்ணைப்பள்ளி மாணவரைச் சட்டநம்பிப் பிள்ளை பிடித்து வருவதினின்றோ, சிறைக்குத் தப்பி ஒளிந்து திரியும் குற்றவாளிகளை ஊர்காவலர் பிடித்துவருவதினின்றோ, இவ் விளையாட்டுத் தோன்றியிருக்கலாம்.