4. பந்து |
துணியாலும் கயிற்றாலும் இறுகக் கட்டப்பட்ட உருண்டையை எறிந்தாடும் ஆட்டு, பந்து எனப்படும். (பந்து = உருண்டையானது). |
I. பேய்ப்பந்து |
ஆட்டின் பெயர் : பேய்த்தனமாக ஒருவன்மேலொருவன் எறிந்தாடும் பந்து, பேய்ப்பந்து எனப் பெயர் பெற்றிருக்கலாம். |
ஆடுவார் தொகை : பெரும்பாலும் நால்வர்க்கு மேற்பட்ட பலர் ஆடுவதே இவ் விளையாட்டிற்கேற்றதாம். ஆடுவார் தொகை பெருகப்பெருக இவ் ஆட்டுச் சிறக்கும். |
ஆடுகருவி : ஆடுவார் எத்துணையராயினும் ஒரு பந்தே இவ் ஆட்டிற்குரியதாம். |
ஆடிடம் : பொட்டலும் வெளிநிலமும் இதை ஆடுமிடமாம். |
ஆடுமுறை : பலர் இடையிட்டு நின்றுகொண்டிருக்க அவருள் ஒருவன் பந்தை மேலே போட்டுப் பிடித்துக்கொண்டு, "பந்தே பந்து" என்று உரக்கக் கத்துவான். பிறர் "என்ன பந்து?" என்று கேட்பர். அவன் "பேய்ப்பந்து" என்பான். "யார் மேலே" என்று ஒருவன் கேட்க, அவன் "உன்மேலே" என்று சொல்லிக் கொண்டு அவன்மேல் வன்மையாய் எறிவான். அது அவன்மேல் பட்டாலும் படும்; படாதுபோனாலும் போம். பந்து யார் கைப்பட்டதோ அவன் அதை ஓங்கி யார்மேலும் எறிவான். இங்ஙனம் விருப்பமுள்ளவரை மாறி மாறி அடித்து ஆடிக் கொண்டேயிருப்பர். யார் எறியினும் அவனுடைய வலிமைக்குத் தக்கவாறு வன்மையாய் எறிவதே வழக்கம். |
ஆட்டுத்தோற்றம் : குரங்கெறி விளங்காயினின்றோ, பேய்ச் செயலாகக் கருதப்பட்ட ஒரு பந்து வீழ்ச்சியினின்றோ, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம். |