பக்கம் எண் :

தமிழ்நாட்டு விளையாட்டுகள்77

(2) இரவாட்டு

1. "பாக்குவெட்டியைக் காணோமே"

     ஆட்டின் பெயர் : 'பாக்குவெட்டியைக் காணோமே' என்று சொல்லித் தொடங்கும் விளையாட்டு, அச் சொல்லையே பெயராகக் கொண்டது; இது வடகொங்கு நாட்டில் 'பருப்புச்சட்டி' எனப்படும்.
     ஆடுவார் தொகை : பொதுவாக அறுவர்க்குக் குறையாத பலர் இதை ஆடுவர்.
     ஆடிடம் : ஊர்ப்பொட்டல் இதை ஆடுமிடமாம்.
     ஆடுமுறை : தலைமையான இரு பெதும்பையார்1 அண்ணாவியர்போல் எதிரெதிர் நின்றுகொள்வர். அவருள் ஒருத்தியின் பின்னால், ஏனைச் சிறுமியரெல்லாரும் ஒருத்தி அரையாடையை இன்னொருத்தி பற்றிக்கொண்டு வரிசையாய் நிற்பர். இன்னொருத்தி, அவ் வரிசைக்கு எதிர் நின்று மறுக்காட்டி வலமும் இடமும் சுற்றிச்சென்று, வரிசையாய் நிற்கும் சிறுமியருள் அண்ணாவியொழிந்த பிறருள் ஒருத்தியை அல்லது பலரைத் தொடமுயல்வாள். அவள் வலஞ் செல்லும் போது இடமும், இடஞ் செல்லும் போது வலமுமாக, வரிசையாய் நிற்குஞ் சிறுமியர் வளைந்து வளைந்து இயங்குவர். தொடப்பட்ட பெண் நீங்கிவிட வேண்டும். இங்ஙனம் (அண்ணாவியொழிந்த) எல்லாப் பெண்களும் தொடப்படும்வரை, ஆட்டுத் தொடரலாம்.
     ஓர் ஆட்டை முடிந்தபின் மறுமுறையும் முன் போன்றே ஆடப்பெறும்.
     ஆட்டு நிகழும்போது, தனித்து நிற்பவளும் வரிசை முதல்வியுமான அண்ணாவியர் இருவரும், பின் வருமாறு
 

1. எட்டு அகவை முதல் 11 அகவை வரையுள்ள பெண் பெதும்பை.