(குயில், சென்னை, 1.5.62)
இன்று மட்டும் அன்று. ஆங்கிலேயர் ஆளுங்காலத்திலேயே தமிழ் வகுப்பில் தமிழிலக்கணம் புறக்கணிக்கப்பட்டு விட்டது. தம்மொழி உயர்ந்தது என்று எண்ணும்படி செய்ய வேண்டுமானால் தமிழ் தலை தாழ்த்தப்பட வேண்டும் என்பது தமிழகத்தில் வாழும் ஒரு கூட்டத்தின் எண்ணம். தமிழை தாழ்த்த வேண்டுமானால் தமிழிலக்கணம் மறைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் முடிவு கட்டினார்கள். தமிழ் வகுப்பில் தமிழிலக்கணம் சொல்லித்தராமல், இருக்க அவர்கள் பெரும்பாடுபட்டிருக்கிறார்கள். ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும்போது ஆங்கில இலக்கணத்தை ஒரு பாடமாகவே அவர்கள் வைக்கவில்லையாம். அதுதான் நாகரிகமாம். அதுபோலவே தமிழ் வகுப்புகற்றாலும் தமிழ் இலக்கணத்தை ஒரு பாடமாக வைத்து நடத்த வேண்டியதில்லை என்ற சொற்களை ஆங்கிலேயர் வாயாலேயே சொல்ல வைத்தார்கள் அந்தக் கூட்டத்தார். நாகரிகமாக ஆளவந்த ஆங்கிலேயர் வாயே இவ்வாறு சொல்லும்படி செய்த அவர்கள் வெளியிலும் சும்மா இருந்துவிடவில்லை. நாளேடுகளிலும் தம்மிடமுள்ள கிழமை ஏடுகளிலும் பிழைச் சொற்களை பிழையற்ற சொற்களைப் போல புகுத்தினர். மாட்சி என்பதை மாக்ஷி என்று எழுதிக் காட்டி நம்ப வைத்தார்கள். சிறிது மேலே சென்று சூழ்ச்சி என்பதை சூக்ஷி என்று கொட்டை எழுத்தில் போட்டார்கள்.இம்முறை இன்றளவும் நிற்காமல் தொடர்கின்றது. இப்போது காட்சி என்பதைக் காக்ஷி ஆக்கி இருக்கின் றார்கள். இது ஒன்றல்ல. இதுபோல ஆயிரக்கணக்கான சொற்களைக் காட்ட முடியும்.
|