பிழை இன்றிப் புலவரால் எழுதப்படுபவற்றை முரட்டுத் தமிழ் என்று கூறி இடுப்புடைத்தார்கள். தம் மொழியினின்றே தமிழ் மொழி வந்தது என்று கூறித் திரியும் அவர்கட்கு, உண்மையிலேயே தமிழிலக்கணம் தீராப்பகையாக இருந்தது. அவர்கள் இலக்கணம் என்ற சொல்லே தமிழ் அல்ல என்பார்கள். இலக்கு அணம் என்ற இலக்கண வகையால் பிரித்துக் காட்டி அது தூய தமிழ்ச் சொற்சொடர் என்பார்கள் இலக்கணம் அறிந்த புலவர். இங்கே நோக்குங்கள் தமிழர்கட்கு இலக்கணம் தெரிந்திருந்தால் என்னாகும் என்பதை! இது மட்டுமா?ஆங்கிலத்தையே அன்புள்ள தமிழர் காதிலும் போட்டுப் போட்டு அவர்களைக் குட்டிச் சுவராக்கினார்கள். இன்றைக்குப் பேசும் பேச்சில் நூற்றுக்கு எண்பது சொல்லாவது ஆங்கிலச் சொற்களாய் இருக்க வேண்டும் என்று கட்டாயப் பெருமையாக்கப்பட்டு விட்டது. சீர்காழி என்பதை புகைவண்டி நிலைய அதிகாரி சீய்யாழி என்று பலகையில் எழுதுவிக்க சிறிதும் அஞ்சமாட்டான். காழி என்ற சொல் சீர் என்ற அடைமொழி பெற்று வந்தது என்பது தமிழிலக்கணம் தெரிந்தவர்க்கே தெரியும். தமிழிலகணத்தையே கேட்டிராத மக்கள் சிய்யாழி வர அஞ்சுமா? ஓர் எழுத்தாளர் சொன்னார்; ஆடு குட்டி என்ற சொற்களை ஆடு குட்டி என்றே சொல்லுக ஆட்டுக்குட்டி என்று சொல்லாதொழிக என்று. இதுபற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியவை பல. அந்த எழுத்தாளர் தமிழிலக்கணம் தெரிந்தவர். இருக்கும் ஊரில் இரண்டு நாள் குடியிருந்தும் அறியாதவர். தமிழிலக்கணம் ஒழிந்துபோக வேண்டும் என்ற தம் கூட்டத் தாரின் கொள்கையை வற்புறுத்தவே மேற்கண்டவாறு சொல்லியதாக நாம் உணர வேண்டும். இக்கட்டுரையை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு போக நாம் எண்ணவில்லை. புலவர் வகுப்புகள் நடைபெறுகின்றன. இலக்கண புலமை உடைய தமிழ்ச் சான்றோரே அவ்வகுப்புக்களை நடத்திச் செல்லுகின்றார்கள். இங்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான். அவர்கள் இலக்கணம் சொல்லிக் கொடுப்பதில் ஊக்கங் காட்டுவதாக நம்மால் சொல்ல முடியாது.
|