குயில், தினசரி, புதுவை, நாள்: 4.10.48 பக்.2
பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்கள் தம்மையே தாம் தெரிந்து கொள்ளாதிருந்தனர் 25 ஆண்டுகளுக்குமுன். தம்மைத் திராவிடர் என்று நினையாதிருந்தார்கள் ஐந்தாண்டுகள் முன் வரைக்கும். திராவிடநாடு தம் நாடு என்பதை மறந்தே கிடந்தனர்ஐந்தாண்டு களின் முன்வரைக்கும். 25 ஆண்டுகள் ஆயின பெரியார் நமக்குக் கிடைத்து 25ஆண்டு களாயின நாம் கண் திறந்து! 25 ஆண்டுகளின் முன்பு நாம் எத்தனை சிறுபான்மையோர் தெரியுமா? - இன்றைக்கு? சென்ற முனிசிப்பல் தேர்தல்கள் என்ன தெரிவித்தன? இன்று நடந்த சென்னை நகரசபைத் தேர்தல் எதை நமக்கு எடுத்துக் காட்டிற்று? காங்கிரஸ் இத்தேர்தலில் உறுப்பினரை நிறுத்துவதிலிருந்து வெற்றிகரமாக வாபஸாகி விட்டதா இல்லையா? காங்கிரஸை ஆட்டி வைக்கும் பார்ப்பனர்கள் இத்தேர்தலில் மானமிழந்தார்களா இல்லையா? காங்கிரஸ் கரணம் போட்டுப் பார்த்தும், திராவிடரை அணுக முடியாமல் போயிற்று இல்லையா? இப்போது தெரிகிறதா திராவிடநாட்டை மீட்க அதிக நாளாகாது என்பது? இப்போது தெரிகிறதா திராவிடர் ஆரியரை - அவர்களின் காங்கிரஸுக்கு வால் பிடித்துக் கொண்டே இருக்க மாட்டார்கள் என்பது? சட்டசபைத் தேர்தல் எப்போது? விரைவில் வரட்டும்! சட்டசபைத் தேர்தலுக்கு விரைவில் நாள் குறிக்கட்டுமே! சும்மா இருந்தால்?
திராவிடர் உணர்ச்சிக்கு, நடந்த தேர்தல்கள் அடையாளம் தம்பிமார்களே என்று காங்கிரஸ்காரர்களுக்கும், பார்ப்பனர்கட்கும் கூவுகிறது நம் குயில்!
|