இந்தத் தொடக்கவிழாச் சொற்பொழிவை நான்தான் ஆற்ற வேண்டும் என்று கேட்ட போது, ‘நான் சிலகாலமாக அதிகமாக எந்தப் பொதுக்கூட்டங்களிலும் பேசுவதில்லை; ஆகவே, இந்தக் கூட்டத்திற்கும் வர இயலாதவனா யிருக்கிறேன்’ என்று கூறினேன். ஆனால் எனது மாணவ நண்பர் மதியழகன் நான் வரத்தான் வேண்டுமென்று பிடிவாதம் செய்தார். நான் யோசித்தேன். சரி என்று சம்மதம் தந்தேன். காரணம் நான் இந்த விழாவில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றுவதன் மூலம் ஒரு சில சந்தேகமான பிரச்சனைகள் - அதுவும் என்னைப்பற்றிச் சிலர் கொண்ட சந்தேகமான பிரச்சனைகள் - தீரும் என்பதேயாகும். |
நான் பேச ஒப்புக்கொண்டு கொடுத்த தலைப்பு, ‘நிலையும் நினைப்பும்’ இன்று இந்தத் தமிழ்ப் பொதுப் பேரவையின் தொடக்கவிழாவுக்குத் தலைமை வகிக்க இருந்த துணைவேந்தர் இரத்தினசாமி அவர்கள் சென்னைக்குச் சற்று அவசர வேலை காரணமாகச் சென்று விட்டதால் நண்பர் மதியழகன் தலைமை வகிக்கிறார். சென்னைக்குச் சற்று அவசர வேலை காரணமாகப் போகாமல் துணைவேந்தர் அவர்கள் இந்த விழாவுக்குத் தலைமை வகித்திருந்தால் என் நினைப்பு கட்டுப்படும் நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் நண்பரின் தலைமையில் அந்தக்கட்டு தளர்த்தப்பட்டிருக்கிறது. நினைப்பை வானலோகம் வரை சஞ்சரிக்கவிடலாம். பல்கலைக் கழக விதியை மீறி அன்பு காரணமாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எனது சொற்பொழிவின் மூலம் சர்க்கார் இப்பொழுது சிந்தனைக்கு இட்டிருக்கும் கட்டுப்பாட்டைக் குலைத்துவிடுவேன் என்றோ, அல்லது எனது அரசியல் கருத்தை உங்கள் சொந்தமான கொள்கைக்கு மாறாக மனத்திற்குள் புகுத்திவிடுவேன் என்றோ ஐயப்படத் தேவையில்லை. யார் ஐயங்கொண்டாலும், அச்சங் |