தெற்கே காடாயிருந்ததைப் பிற நாட்டார் கண்டு மெச்சத் தகுந்த அளவு மட்டுமல்ல, பொறாமைப் படும் அளவுக்கு அழித்து நாடுகளும் வீடுகளும் அமைத்திருக்கிறார்கள். வியாபாரத்திலே தழைத் தோங்கி இருக்கிறார்கள். வீரத்திலே திளைத்திருக்கிறார்கள். இன்னும் வீரம் போற்றப்படுகிறது போர்க்களங்களிலே! | தமிழனுடைய வீரம் மங்காதிருக்கக் காரணம், தமிழனுடைய வீரத்திற்கும் பிறருடைய வீரத்திற்குமிருந்த வித்தியாசமே. தமிழன் என்றும் அக்கினியாஸ்திரம் உபயோகித்த தில்லை; பாசுபதத்தைப் பயன்படுத்தியதில்லை. அவனது ஆயுதங்கள் அவனிரு பருத்த தோள்கள். இடையிலே வாள்; வாள் ஏந்தக் கை; கைக்கேற்ற கருத்து; கருத்துக் கேற்ற களம்; களத்துக்கேற்ற காட்சி; அங்குப் பிணக்குவியலைக் கண்டு பயப்படாத காட்சிக் கேற்ற கம்பீரம். கனக விசயரைக் கைது செய்ய கங்கைக்கரைக்குச் சென்றான் சேரன் செங்குட்டவன் என்றால், சென்றான் வீரர்களுடன்; வீரர்கள் சென்றனர் வாள்களோடு; திரும்பினர் வெற்றியோடு, அன்று ஆரியம் தாள் பணிந்தது வாளுக்காக. சேரன் செங்குட்டவன் வெற்றி பெற்றான் என்றால், ஐயனுடைய அருளாலல்ல; மழையைப் பொழியும் வருணாஸ்திர மில்லாமல், அழிக்கும் அக்கினியாஸ்திரம் இல்லாமல், சேரன் சண்டையில் வெற்றி பெற்றான். | இந்த அஸ்திரங்கள், குலோத்துங்கன் இராசராசன், போன்றவர்கள் பர்மா மீது படையெடுத்த போதும் பிற நாடுகளைப் பிடித்த போதும் உபயோகப்படவில்லை. உபயோகப்பட்டதாகச் சான்றுகளில்லை; தமிழர்களுக்கு ஒரு வீசை இரும்பு; ஒரு சிறிய உலைக்கூடம்; கொஞ்சம் மூளை இவை இருந்தால் போதும், வாள் வடிக்க. வாள் வடித்து விட்டார்களானால், அவர்களுக்கு முன்னேயே இருக்கின்ற அஞ்சாநெஞ்சமும், அருமைக் கையும் போதும். பர்ண சாலைகள் அமைக்க வேண்டியதில்லை; நிகும்பல யாகங்கள் ஏதும் செய்ய வேண்டியதில்லை; ஐயனின் அருளைப் பெற. எப்பொழுது அம்மையும் அப்பனும் சண்டை சச்சரவுகளில்லாமலிருக்கிறார்கள் என்ற நேரத்தை எதிர்பார்த்துக் கொண் |
|
|
|