பக்கம் எண் :

சமற்கிருதவாக்கம் - சொற்கள்107

    உருத்தல் = தோன்றுதல். உரு = தோற்றம், வடிவம், வடிவுடைப் பொருள். உரு - உருவு - உருபு = வேற்றுமை வடிவம், அதைக் காட்டும் இடைச்சொல். ஒ.நோ: அளவு - அளபு. உருவு - உருவம். தமிழிலக்கணம் ஆரிய வருகைக்கு எண்ணாயிரமாண்டு முற்பட்டது.

    உலவுதல் = வளைதல், சுற்றுதல். உலா = நகரைச் சுற்றி வரும் பவனி. உலக்கை = உருண்ட பெரும்பிடி. உலம்வா - உலமா. உலமருதல் = சுழலுதல். உலவு - உலகு = உருண்டையாயிருப்பது அல்லது சுற்றி வருவது. ஒ.நோ: கொட்குதல் = சுற்றி வருதல். கொள் - கோள். உலகு - உலகம். லோக் என்னும் வடசொல், பார்த்தது அல்லது பார்க்கப்படுவது என்னும் பொருளது. அது நோக்கு என்னும் தென்சொல்லின் திரிபாம்.

    இனி, உலகம் வட்டமாயிருக்கும் ஞாலம் (பூமி) என்றுமாம். ஒ.நோ: "கடல்சூழ் மண்டிலம்" (குறுந். 300).

    உகரம் உயரத்தைக் குறிக்கும் வேர்ச்சொல். எ-டு: உக்கம் = தலை, உவ்வி = தலை, உத்தி = ஒருவகைத் தலையணி. உச்சி, உம்பர், உவண், உயர்.

    உவண் = மேலிடம். உவணை = தேவருலகம். உவணம் = உயர்ச்சி, பருந்து, கலுழன், கழுகு. பருந்து உயரப் பறக்கும் பறவைகளுள் ஒன்று. "உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?" என்பது பழமொழி. உவணம் - சுவணம் = பருந்து, கலுழன். கழுகு. உவணம் (சுவணம்) முல்லை நிலத்துப் பறவையாதலால், அந் நிலத்தெய்வமாகிய மாயோனுக்கு ஊர்தியாகக் குறிக்கப்பெற்றது.

    சுவணம் என்னும் சொல்லை வடமொழியாளர் சுபர்ண என்று திரித்துப் பின்பு சு + பர்ண என்று பிரித்து, நல்ல இலை, அழகிய இலையுள்ளது, அழகிய இலை போன்ற சிறகையுடையது, என்று பொருந்தாப் புளுகலாகக் கரணியங் காட்டுவர். கடுகளவேனும் பகுத்தறி வுடையார், நகைச்சுவையான இச் சொற்பொருட் கரணியத்தைக் காணின் நகாதிரார்.

    கும்முதல் = திரளுதல். கும் - குமர் - குமரன் = திரண்டவன், இளைஞன். குமரி = திரண்டவள், இளைஞை. ஒ.நோ: L. virginem, E. virgin from virgo to swell. விடைத்தல் = பருத்தல். விலங்கினத்திலும் பறவை யினத்திலும் திரண்டு இளைமையா யிருப்பவற்றை விடையென்பது மரபு. ஆடு, மாடு, குதிரை, மான், பூனை, கோழி, பாம்பு முதலியவற்றுள், திரண்டு இளமையாயிருப்பவற்றை விடையென்பது இருவகை வழக்கிலுமுண்மை கண்டுகொள்க. விடை - விடலை = இளங்காளை, மறவன் (வீரன்), இளைஞன், 16 முதல் 30 ஆண்டு வரைப்பட்டவன், திண்ணியோன். இளநீரை விடலையென்பது நாஞ்சில் நாட்டு வழக்கு. உயிரினங்களிற் பெரும்பாலும் ஆண் பருத்திருப்பதால், விடையென்பது இளவாணையே சிறப்பாகக் குறிக்கும். குமர் என்னும் சொல் உயர்திணையில் இருபாற் பொதுவாம். குமரி