பக்கம் எண் :

சமற்கிருதவாக்கம் - எழுத்து123

இற

    இற்றை நிலைப்படி, வல்லின எழுதொலிகளையெல்லாம்,

    (1) கடுப்பொலி (voiceless unaspirate),

    (2) உரப்பொலி (voiceless aspirate),

    (3) எடுப்பொலி (voiced unaspirate),

    (4) கனைப்பொலி (voiced aspirate),

என நால்வகையாக வகுக்கலாம். இவற்றுள், தமிழில் இருப்பவையெல்லாம் மென்கடுப்பொலிகளும் மெல்லொலிகளுமே. இவற்றுள், பின்னவை மென்கடுப்பொலிகள் சொல்லிடை கடை தனித்தும் மெல்லினத்தின் பின்பும் வந்தாலன்றி நிகழா. இலத்தீனில், மூச்சொலி சேர்ந்த புணர்மெய்களே இல்லை; k-யும் s-உம் சேர்ந்த x (ks) என்னும் புணர்மெய்தான் உண்டு. கிரேக்கத்தில், th, ph, kh என்னும் மூச்சொலிப் புணர்மெய்கள் மூன்றும், ks, ps என்ற மூச்சொலியில்லாப் புணர்மெய்கள் இரண்டும், உள்ளன. இவ்விரு மொழிக்கும் பொதுவாக b, d, g, z என்னும் நாலெடுப்பொலிகள் உள. எழுத்துப் புணர்ச்சியால் ஏற்படும் ஜகர வொலியும் (j) கிரேக்கத்திற்குண்டு. சமற்கிருதத்திலோ வல்லின வொலிகள் ஐந்திற்கும், கடுப்பொலி எடுப்பொலி யாகிய இருவடிவிலும், மூச்சொலியைச் சேர்த்தும், செயற்கை முறையில் இருபது மெய்களைப் பிறப்பித்திருக்கின்றனர். இவற்றுள், மூச்சொலி சேர்ந்த பத்தும் உண்மையில் புணர் மெய்களே (consonantal diphthongs). க்ஷ (க்+ஷ), ஜ்ஞ முதலிய புணர் மெய்களும் கூட்டு மெய்களும் ஏராளம்.

வேத ஆரியர்க் கெழுத்தின்மை

    வேத ஆரியர் இந்தியாவிற்குள் புகுந்தபோது, அவர்க்கு எழுத்து மில்லை; இலக்கியமுமில்லை. வேதத்தில் மேனாட்டுப் பொருள்களைப் பற்றிய குறிப்பிருப்பினும், அஃது எழுதப்பட்டது வட இந்தியாவிலேயே. மேலையாரிய மொழிகளிலெல்லாம் எகர ஒகரக் குறிலும் நெடிலும் உள்ளன. கீழையாரியத்திலோ வட திரவிடத்திற் போன்றே எகர ஒகரக் குறிலில்லை. ஆரியவேதம் முதலில் ஒன்றாயிருந்து, பின்பு மூன்றாகி, இறுதியில் நான்காயிற்று. சமற்கிருதம் தோன்றும் வரையும் கீழையாரியத்திற்கு எழுத்தில்லை. ஆரிய வேதம் நீண்டகாலமாக ஆசிரியனால் வாய்ப்பாடமாக ஓதப்பெற்று மாணவரால் செவி வாயிலாகவே கற்கப்பட்டு வந்ததனால், அதற்கு ஆரியத்தில் சுருதி யென்றும், தமிழில் எழுதாக்கிளவி என்றும் பெயர் எழுந்தன.

    ச்ரு = கேள். ச்ருதி = கேள்வி. ச்ரு என்பது செவியுறு என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபேயென வறிக. இங்ஙனம் பல வடசொற்கள் தூய ஆரியமாயினும், தமிழ் வேர்களினின்றே திரிந்தவையென்பது, என் வடமொழி வரலாறு என்னும் நூலில் விரிவாக விளக்கப்பெறும்.