பக்கம் எண் :

124தென்சொற் கட்டுரைகள்

தம

தமிழ் முறையைப் பின்பற்றி யெழுந்த ஆரிய நெடுங்கணக்கு

    வேத ஆரியர் கி. மு. 1500 போல் தென்னாடு வந்து தமிழரொடு தொடர்பு கொண்ட பின்னரே சமற்கிருதம் தோன்றிற்று. அன்று ஆயிரக் கணக்கான தமிழ்ச் சொற்களும் தென் சொற்களும் கடன் கொள்ளப் பட்டதுடன், தமிழ் நெடுங்கணக்கைப் பின்பற்றி ஆரிய நெடுங்கணக்கும் அமைக்கப்பட்டது.

சமற்கிருத நெடுங்கணக்கு தமிழ் முறையைப் பின்பற்றிய தென்பதற்குச் சான்றுகள் :

    1) முறை

    மேலையாரிய மொழிகளுள் ஒன்றிற்கேனும் நெடுங்கணக்கில் முறையில்லை. உயிரும் மெய்யும் வேறுபாடின்றிக் கலந்து கிடக்கின்றன. தமிழிலோ, உயிர் முன்னும் மெய் பின்னும், உயிருள் குறில் முன்னும் நெடில் பின்னும், குறிலுள் அகரம் முன்னும் இகரம் இடையும் உகரம் பின்னும், அதன்பின் எகரமும் இறுதியில் ஒகரமும், ஏகாரத்தையடுத்து ஐகாரமும் ஓகாரத்தையடுத்து ஒளகாரமும்;

    மெய்யுள் இனவலியும் மெலியுமாக இவ்விரண்டாய் வல்லினம் முன்னும் மெல்லினம் பின்னும், இடையினம் அவற்றின் பின்னும், பிந்தி யெழுந்த நாலெழுத்தும் இறுதியிலும்; வல்லினம் க ச ட த ப என்ற முறையிலும், இடையினம் ய ர ல வ என்ற முறையிலும்,

    ககரத்திற்கினமான நுண்ணொலி (ஆய்தம்) ககரத்தையடுத்து முன்னும், அடித்தொண்டை முதல் இதழ் வரைப்பட்ட எழுத்துப் பிறப்பியல் முறைபற்றி ஒழுங்காக வைக்கப்பட்டுள்ளன. உலகில் முதன் முதல் இம் முறையில் எழுத்துகள் வைக்கப்பட்ட நெடுங்கணக்குடைய மொழி தமிழே. தமிழில், எழுத்திலக்கணம் பன்னிரண்டனுள் முறை என்பதும் ஒன்று.

    2) புணர்ச்சி

    எழுத்துப் புணர்ச்சியும் மேலையாரிய மொழிகட்கில்லை. இதனால், உயிர் மெய்யெழுத்துமில்லை.

    3) ஒப்பு

    தமிழாய்தத்தை ஒருபுடை யொத்த வடமொழி விசர்க்கம். உயிருக்கும் மெய்க்கும் இடையில் வைக்கப்பட்டிருப்பது ஊன்றி நோக்கத்தக்கது.

4) தொன்மை

    தமிழ் நெடுங்கணக்கு கி. மு. பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்பே குமரிக் கண்டத்தில் தோன்றியது. வேத ஆரியர் இந்தியாவிற்கு வந்த காலம் கி.மு. 2000-1500.