| 'காலம்' என்னுஞ் சொல் எம்மொழிக்குரியது? | 77 |
|
தம
தமிழ்ச்
செய்யுளுறுப்புகள் இருபத்துநான்கனுள் காலமும் ஒன்றாகத் தொல்காப்பியத்துட் குறிக்கப்பட்டுள்ளது.
"கேட்போர் களனே காலவகை
எனாஅ..."
(தொல். பொருள்.
செய். 1)
அஃறிணை முடிபுபெறும்
உயர்திணைச் சொற்களுள் காலம் என்பதும் ஒன்றாகக் கூறுவர் தொல்காப்பியர்.
"காலம் உலகம் உயிரே உடம்பே
..............................................................................
பால்பிரிந் திசையா உயர்திணை மேன"
(தொல்.
சொல். கிளவி. 58)
காலம் என்பது
வடசொல்லாயின், தமிழிலக்கணம் கூறப்புகுந்த தொல்காப்பியத்தில் அதனைக் கூறார் ஆசிரியர்.
கால் என்னுஞ்
சொற்குத் தமிழிற் பல பொருள்களிருப்பினும், அவற்றுள் நான்கே தலைமையானவும், பிறவற்றிற்கு
அடிப்படையானவு மாகும். அவை கால் (leg),
கால்வாய், காற்று (கால் + து), காலம் என்பன வாகும், இந் நான்கனுள்ளும், கூர்ந்து
நோக்கின், முதலதே ஏனை மூன்றிற்கும் மூலமாகும்.
ஒரு சொற்குப் பல
பொருளிருப்பின் அவை யாவும் ஒரே தொடர் புடையனவா யிருக்கும். தொடர்பின்றேல் ஒரே வடிவுள்ள
வெவ்வேறு சொற்குரியனவா யிருக்கும். இங்குக் கால் என்னுஞ் சொற்குக் கூறிய நான்கு பொருளும்
ஒரே தொடர்புடையனவே, எங்ஙனமெனின், 'நீண்டது' என்னும் கருத்தையே அவை நான்கும் தழுவியுள்ளன.
கால் என்னும் உறுப்பு (ஒடுங்கி) நீண்டிருப்பது; கால்வாய் நீண்டு ஓடுவது; காற்று ஓரிடத்து
நில்லாது திசை நெடுக நீண்டு வீசுவது; காலம் ஒரு முடிவின்றி நீண்டு செல்வது. இந் நீட்சிக்
கருத்துக் கால் என்னும் உறுப்பினின்றே தோன்றிய தாகும்.
கால் என்னும்
உறுப்பின் பெயர் கால் என்னும் வினையினின்றும் தோன்றியதாகும். காலுதல் சிந்துதல், அல்லது
பொழிதல். மேகங்கள் மழை பொழிவது காலுதல் எனப்படும். தூரத்தில் மழை பொழியும்போது,
தூண்கள் போலப் பல படலங்களாகப் பிரிந்து வீழ்வதை என்றும் பார்க்கலாம். அவ் வீழ்ச்சிகள்
மழைக்கால்கள் எனப்படும். அக் கால்கள் மேகத்திற்கு அல்லது வானத்திற்குத் தாங்கல்போலக்
கீழே நீண்டு நிலத்தில் விழுவதுபோல், உறுப்பாகிய காலும் ஓர் உடம்பிற்குத் தாங்கலாய்க்
கீழே நீண்டு நிலத்திற் பதிவதால், உவமையாகு பெயராய்க் காலெனப்பட்டது. பின்னர்த்
தாங்குவது, அடியில் இருப்பது என்னும் பொருள்பற்றிக் கால் என்பது பல பொருள் கட்குப்
பெயராயிற்று. முழங்கால் உடம்பிற் காற்பகுதியாதலின் காலென்பது நாலிலொரு பங்கையும்
குறிப்பதாயிற்று. இதற்கு மறுதலை யாகக் கூறுவர் இலக்கணிகள்.
|
|
|