பக்கம் எண் :

வரிசையறிதல்43

இவ்வகையும் திறமும் நிலையும் அறிந்தே அவரவர்க்குத் தக்கவாறு பரிசளித்தல் வேண்டும். இங்ஙனம் பகுத்தறிதலையே வரிசையறிதல் என்றனர் முன்னோர்.

"பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கி" (புறம். 6)

"வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை" (ஷெ 47)

"ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை யறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மாவண் டோன்றல்
அதுநற் கறிந்தனை யாயின்
பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே." (ஷெ 121)

"வரிசை யறிதலின் தன்னுந் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர்
பெருங்களிறு நல்கி யோனே." (ஷெ 140)

"வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க் கடையா வாயி லோயே" (ஷெ 206)

என்பன புலவரின் வரிசையறிதலைக் குறிப்பன.

உரைவேந்தர், கொண்முடிபுக் கலைச் செல்வர், ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை யும், வரலாற்றாராய்ச்சியாளர் மயிலைச் சீனி. வேங்கட சாமியும், இன்றுள்ள மூத்த தலைமுறையைச் சேர்ந்த ஒப்புயர்வற்ற இருபெரும் புலவராவர்.

யசோதரகாவியவுரை, புறநானூற்று விளக்கவுரை, பண்டைச் சேர மன்னர் வரலாறு முதலியன ஒளவை. சு.து. வும்; கிறித்தவமும் தமிழும், பௌத்தமும் தமிழும், இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், மறைந்து போன தமிழ்நூல்கள், மகேந்திரவர்மன், தெள்ளாறெறிந்த நந்திவர்மன், பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியம், தமிழர் வளர்த்த அழகு கலைகள், துளுநாட்டு வரலாறு, காவியப் புலவனும் ஓவியக் கலைஞனும், முதலியன மயிலை சீ. வே.யும்; எழுதிய அரும் புலப் பொதுநலப் படைப்புகளாகும். இவை பெரும்பாலும் ஏனையரால் எழுதப்படாதவை.

இவ் விருவர்க்கும் தனித்தனிக் குறைந்த பக்கம் பத்தாயிரம் உருபாவேனும் பொற்பதக்கத்துடன் வழங்குதல் வேண்டும். இவ் விருவரும் கழிபெரு மூப்பெய்தியுள்ளதொடு, புலவர் மயிலைச் சீனி. வேங்கடசாமியார் நோய்வாய்ப்பட்டுப் பாயும் படுக்கையுமாயுள்ளார். ஆதலால், அரசோ, ஒரு பல்கலைக்கழகமோ, இரண்டும் இணைந்தோ, இச் சிறப்பை இயன்ற விரைவிற் செய்து தம் கடனைத் தீர்ப்பனவாக. நோயுண்டவர்க்கு மருத்துவஞ் செய்வதும் அரசின் கடமையே.

ஒரு புலவரைக் குன்றச் சிறப்பித்தல் போற்றாமையின்பாற்பட்டதே.

Damn with faint praise a commend so frigidly as to suggest disapproval.

- "செந்தமிழ்ச் செல்வி" மே 1980