1
மொழித்துறையில் தமிழின் நிலை
அறிஞர்காள்! அறிஞையர்காள்! உடன்பிறப்பாளர்காள்!
உடன் பிறப்பாட்டியர்காள்! உங்கள் அனைவர்க்கும்
என் அன்பான வணக்கம்.
"மொழித்துறையில் தமிழின் நிலை" என்பது
எனக்குத் தரப்பட்ட தலைப்பாகும். இத்தலைப்பு,
மொழிநூல், கல்வி, அரசியல், மதவியல், வழக்கியல்
முதலிய பல துறைகளையுந் தழுவியதாதலின், அவையனைத் தையும்பற்றி
இன்று யான் பேச விரும்புகின்றேன். ஆயின், வசதிபற்றி
யும் விளக்கம் பற்றியும், அவற்றையெல்லாம் (1) தமிழின்
உண்மை நிலை, (2) இன்று அது இருக்கும் நிலை, (3) இனி நாம்
செய்யவேண்டு வன, என முத்திறப்படுத்தி இம்முறையிலேயே
பேசுகின்றேன்.
(1) தமிழின் உண்மை நிலை
தமிழ்மொழி, தொன்மையும் முன்மையும்,
எண்மையும் (எளிமையும்) ஒண்மையும், தனிமையும், இனிமையும்,
தாய்மையும், தூய்மையும், செம்மையும், மும்மையும்,
கலைமையும், தலைமையும், இளமையும், வளமையும், முதுமையும்
புதுமையும், ஒருங்கே கொண்ட ஓர் உயர்தனிச் செம்மொழியாகும்.
"ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்
- ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னேரிலாத தமிழ்".
என்னும் பழவெண்பா தமிழின் தொன்மையையும்,
"கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா
மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ"
என்னும் பரஞ்சோதி முனிவர் பாடல் தமிழின்
செம்மையையும், நன்கனம் உணர்த்தும்.
மேற்காட்டிய வெண்பாவில் "ஓங்கல்" என்பது,
பொதிய மலையைக் குறித்ததென்று கொள்வதினும்,
தலைக் கழகப் பஃறுளியாறெழுந்த குமரி மலையைக்
குறிப்பதென்று கொள்வதே சாலப் பொருத்தமாம்.
|