பக்கம் எண் :

30பாவாணர் உரைகள்

வருவதற்கு முன்னமே சிறந்த பண்பாட்டோடு விளங்கியவர்கள் என்று ஒத்துக்கொள்ளத் தயங்குகின்றார்கள்; மறுக்கின்றார்கள்.

இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே - அஃதாவது கடைக் கழகக் காலத்துக்கு முன்பே - ஆரியர்கள் தமிழர்களைத் தாழ்த்தி வந்ததுடன், தாங்கள் குலவொழுத்திற் குன்றியவர்களாகவும் இருந்ததனால்தான் திருவள்ளுவர்,

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்"
(குறள். 972)

எனவும்

"மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்"
(குறள். 134)

எனவும் கூறியுள்ளார்.

மேலும், தமிழர்களாகிய நாம் கூறும் அறம்வேறு; ஆரியர்கள் சொல்லும் தருமம் வேறு. நாம் அறம் என்று குறிப்பிடுவது நல்ல நெறி முறைகளை. ஆனால் அவர்கள் தருமம் என்று கூறுவது குல வொழுக்கத்தை - அஃதாவது வருணாசிரம தர்மத்தை (Established conduct). எனவே அறம் என்ற தமிழ்ச் சொல்லுக்குத் "தருமம்" என்னும் வடசொல் நேரான மொழிபெயர்ப்பாகாது.

இது நிற்க, உலகில் உள்ள 3000 மொழிகளில் தமிழ் மிகவும் முந்தியது என்பதுமட்டும் அன்று, தலைமையானதும் ஆகும். இந்தக் கருத்து எனக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே புலனாயிற்று. வடமொழி - தமிழ் வரலாற்று ஆராய்ச்சிகளின் வாயிலாக, வரவர இக்கருத்துத் தெளிவுபெற்று வருகின்றதேயன்றி, மயக்கத்திற்கு இடமுடையதாக வில்லை.

வடமொழியின் தலைமைப் பிடியிலிருந்து தமிழை மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள். இதற்காகத்தான் கடந்த பல ஆண்டு களாகப் பாடுபட்டு வருகிறேன். ஆனாலும், இவ்வகையில் நான் எதிர் பார்த்த பலன் விளையவில்லை. ஆனால் அஃது என் குற்றம் அன்று. நோய்க்கு ஏற்ற மருந்தை நான் ஆயத்தம் செய்துவிட்டேன். அதை மற்றவர்கள் உண்டு நோய் தீரப்பெறவில்லை யென்றால் என் குற்றமா அது?

தமிழ் திரவிட மொழிகளுக்குத் தாய்மட்டும் அன்று; ஆரியத்திற்கு மூலமும் அதுவே. இந்தக் கருத்தை நான் நெடுநாளாகவே வற்புறுத்தி வந்திருக்கிறேன். ஆனால் அண்மையில் சென்னையில் நடந்த உலகத் தமிழ் மாநாடு இந்தக் கொள்கையை விளக்கும் வகையில் அமைந்ததாகத் தோன்றவில்லை. அந்தக் குறைபாட்டை நீக்கவே இம்மாநாடு கூட்டப் பட்டுள்ளது.