பக்கம் எண் :

தமிழ் வரலாற்று, தமிழ்க்கழக அமைப்புமாநாட்டுத் தலைமையுரை31

இன்று நடைபெறுவது தமிழ் வரலாற்று மாநாடு. தமிழ்க்கழக அமைப்பு மாநாடு நாளை நடைபெற இருக்கின்றது. இன்றைய கூட்டத்தில் தொல்காப்பியர் காலமும், திருவள்ளுவர் காலமும், தமிழன் பிறந்தகமும் முடிவு செய்யப்பட இருக்கின்றன.

தமிழ் வரலாறு என்று சொல்லும் பொழுது தமிழின் பழமை நம் கண்முன் நிற்கின்றது. தமிழ் மிகப் பழமையான மொழி. அதன் பழமையை நிலைநாட்டுவதற்குக் குமரிநாட்டு மொழி தமிழ் என்று சொல்வதே போதும். உலகத்து நாடுகளில் மிகப் பழமையானது குமரிநாடு. மேனாட்டு உயிர்நூல் (Biology) அறிஞர்கள் இதை ஒத்துக் கொள்கிறார்கள். குமரிநாட்டுப் பறவைகள், மரங்கள் போன்றவற்றின் தொன்மை இக்கொள்கைக்குத் துணை செய்கிறது.

இந்தக் குமரிக்கண்டம் கடல்கோளால் அழிந்தபோது, இங்கு வாழ்ந்த தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கே சென்றனர். இவ் வாறு விந்திய மலைக்கே வடக்கேசென்ற தமிழரே திராவிடர் ஆயினர்; அவர்கள் வடமேற்கே சென்றபோது ஆரியர் ஆயினர். இதனால் தமிழ் திரவிடமாகி, ஆரியமாக வடிவெடுத்தது.

குமரிக்கண்டத்தில் கடலால் கொள்ளப்பட்ட தலைக்கழகமும் இடைக்கழகமும் இருந்தன. இவற்றுள் இடைக்கழகம் அழிந்த பிறகுதான் ஆரியர் இந்தநாட்டிற்கு வந்தனர். அவர்கள் வந்தபோதே, தமிழன் எளிதில் ஏமாறுபவன் என்பதை கண்டுகொண்டார்கள். அதனால் தாங்கள் மட்டுமன்றித் தங்கள் மரபினரும் வளமாக வாழ்வதற்கு நிலையான ஒரு திட்டம் வகுத்தார்கள்.

முன்பே நான் சொன்னபடி, தமிழ் வழிபாட்டுக்கு உதவாத மொழி யென்று விலக்கியதோடு மட்டும் அல்லாமல், முதலிரண்டு கழகத்திலும் இயற்றப்பட்ட தமிழ் நூல்களை அடியோடு அழித்து விட்டார்கள். ஏனென்றால், நிலப்பரப்பு கடலில் மூழ்கும்போது உயிர்வகைகள் அனைத் தும் அழிந்து போகலாம்; ஆனால் நூல்கள் அத்தனையும் அழிந்து போயின என்பது முறையாகாது, கடல்கோளுக்குத் தப்பிவந்த புலவர்கள் நூல்களை யெல்லாம் எறிந்துவிட்டு வந்துவிட்டார்கள் என்று சொல்லுதல் இயலாது. ஆகவே அவை அழிக்கப்பட்டேயிருத்தல் வேண்டும். அவை நிலைத்திருந்தால் தமிழின் பெருமையை - தமிழனின் மேன்மையை வருங்கால மக்கள் அறிந்து கொள்வார்கள் என்ற தீய எண்ணத்தால் ஆரியர்களே அவற்றை அழித்துவிட்டனர்.

இந்த அழிவிலிருந்து எஞ்சி நின்ற நூல் தொல்காப்பியம் ஒன்றுமே. இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. இவற்றுள் பொருள் பற்றிய பகுதியில் செய்யுள் இயற்றும் முறையும் அணிவகைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆகவே தொல்காப்பியம்