பக்கம் எண் :

இயல்புடைய மூவர்'9

இல்வாழ்க்கைக்குச் சொல்லப்பட்ட அறங்களுள் ஒன்றான விருந் தோம்பலைப்பற்றிய அதிகாரத்தில்,

"வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்."
(குறள். 85)

என்று வேளாளனைமட்டும் ஏன் விதந்து குறிக்கவேண்டும்? பிற தொழில்களைக் குறியாவிடினும், திருவள்ளுவர் செய்து வந்ததாகச் சொல்லப்பெறும் நெசவுத் தொழிலைப்பற்றியாவது,

பஞ்சும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
எஞ்சல் மிசைவான் கதிர்.

என்றோ,

நூலும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மேலை மிசைவான் தறி.

என்றோ, கூறியிருக்கலாமே!

"வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்"

என்னும் நல்லாதனார் கூற்றும்,

"செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே செக்காரப்
பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே-முட்டிபுகும்
பார்ப்பார் அகத்தையெட்டிப் பாரோமே எந்நாளும்
காப்பாரே வேளாளர் காண்"

என்னும் கம்பர் பாட்டும், விருந்தோம்பும் அறம் வேளாளன் சிறப்பி யல்பு என்றன்றோ காட்டும்!

இனி, பாயிரத்தைச்சேர்ந்த வான்சிறப்பதிகாரத்திலும்,

"ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்."
(குறள். 14)

என்று வேளாளரையே சிறப்பித்தோதினர் வள்ளுவர். ஆதலால், "இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்" ஆன வேளாளரே, இல்வாழ்க்கையருட் சிறந்தவராகத் திருவள்ளுவராற் கொள்ளப் பெற்றனர் என்பது தெளிவாம். குடி [வீடு, குடியிருத்தல், குடியானவன் (உழவன்)] குடிகள் என்னும் தொடர்புடைய சொற்களும், வேளாளனின் சிறப்பை ஓரளவு உணர்த்தும்.

ஆகவே,

"இவ்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை"
(குறள். 41)

என்னுங் குறட்கு இல்லறத்தோடு கூடி வாழ்வதற்குச் சிறந்தவன் என்று சொல்லப்பெறும் வேளாளன், தன்னைப்போன்றே இல்வாழும் இயல்புடைய பார்ப்பான், அரசன், வணிகன் என்னும் ஏனை மூவர்க்கும், அவர்செல்லும்