பக்கம் எண் :

கலைச்சொல்லாக்க நெறிமுறைகள் 101

     நெடின்முதற் சொல்லும் தனிநெடிற் சொல்லும் நிலைமொழி
வருமொழியாக நின்றும் வந்தும் புணரும்போது, அந் நெடில்கள்
ஒரோவிடத்துக் குறுகும்.

     எ-கா:மேன் + மேலும் = மென்மேலும்.

          ஆ + பீ = ஆப்பி.

     தனி நெடிற்சொற்கள் இரட்டிப்பின், அதாவது தம்முன் தாம்வரின்,
இரண்டும் ஒரோவிடத்துக் குறுகும் என்பது. சிச்சி, தித்தி முதலிய
புணர்ச்சொல்லில் நிலைமொழி மட்டுங் குறுகிற்று.

     இதுகாறும் கூறியவற்றால், தேன் என்னும் சொல் தெளிவு என்னும்
வேர்ப்பொருள் கொண்ட, தென்சொல்லென்றும்; அது முறையே தேம் -
தீம் - தீவு எனத் திரியுமென்றும்; தீ என்னும் பகுதி இரட்டிக்குமிடத்து
தித்தி என மருவிப் புணருமென்றும்; தமிழ்ச்சொற்களைத்
தமிழடிப்படையாகவே ஆய்தல் வேண்டுமென்றும்; பண்டைத் தனித்தமிழ்
நூல்களும் பல்லாயிரக் கணக்கான தென்சொற்களும் மறைந்து, இன்றுள்ள
இலக்கண நூல்களும் விளங்காதவிடத்து, மொழித்திறத்தின் முட்டறுப்பது
மொழி நூலேயென்றும்; கள், மது என்னும் சொற்கள் மயக்குவது என்பதை
வேர்ப் பொருளாகக் கொண்ட தென்சொற்களென்றும்; தமிழே திரவிடமாகத்
திரிந்துள்ள தென்றும்; வடமொழியில் வழங்குந் துணையானே ஒருசொல்
வடசொல்லாகி விடாதென்றும்; தெற்றெனத் தெரிந்துகொள்க.

     "தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்"(புறம். 392)

     "பாம்பு வெகுண்டன்ன தேறல்"(சிறுபா. 237)

என வருமிடமெல்லாம், பெரு மயக்கஞ் செய்யும் கடும் புளிப்பான மதுக்கள்
குறிக்கப்படின், ஆண்டுத் தேறல் என்பது தெளிவாக அரித் தெடுக்கப்படும்
பொருட் டெளிவைக் குறிக்குமாதலின் தெளிவுக்கருத்து அங்கும் பொருந்துவ
தென்றே தெளிக. அரித்தெடுக்கப்படுவதனாலேயே அரியல் எனப்
பெயர்பெறும். சாலி என்னும் செந்நெல்லரிசியினின்று இறக்கப்படும் கள்
சான்று எனப்பட்டது என்பது அறிஞர் கருத்து.

                                        - "குயில்" 25.8.1959