பக்கம் எண் :

102மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்


15. கலைச்சொல்லாக்க நெறிமுறைகள்

     தற்காலக் கல்விக் கலைகளிற் பல, மேனாட்டினின்றும் நமக்கு
வந்தமையால், அவற்றைப்பற்றிய பெருநூல்களும், குறியீடுகளும் இன்றும்
பெரும்பாலும் மேலை மொழிகளிலேயே உள்ளன. தற்போது குடியரசுக் கான
வழிதுறைகளை வகுக்குங்கால், தாய்மொழியிற் கல்வி கற்பிக்க
வேண்டியிருத்தலின் தமிழ்நாட்டுக் கல்விக்குத் தமிழிற் கலைச்சொற் களையும்,
குறியீடுகளையும் மொழிபெயர்த்துக் கொள்ளுதலும் ஆக்கிக் கொள்ளுதலும்
இன்றியமையாததாகும். இதற்காகப் பல சார்பில் பல முறைகள் பல குழுக்கள்
பலவிடத்திற் கூடியாராய்ந்தும் ஓரளவு வேலை செய்தும் வந்திருக்கின்றன;
வருகின்றன. ஆனால், கலைச்சொற்களை ஆக்கிக்கொள்ளும் நெறிமுறைகளை
இன்னும் அக் குழுக்கள் சரியாய் உணராதிருப்பது பெரிதும் வருந்தத்தக்கது.

     தமிழிற் கலைச்சொற்களை ஆக்குவார் ஆங்கிலம் தமிழ் இரண்டையும்
நன்றாயறிந்தவராயும் சொல்லாராய்ச்சி யுடையவராயும் தமிழ்ப்பற்று
நிரம்பியவராயு மிருத்தல்வேண்டும்.

     தமிழறியாத பெருமாளர் கலைச்சொல்லாக்குவது குருடர்
வழிகாட்டுவதையும், சொல்லாராய்ச்சியில்லாதார் ஆக்கும் கலைச்சொல்
இளஞ்சிறார் ஓவியத்தையுமே ஒக்கும். தமிழ்ப்பற் றில்லாதவரிடம்
கலைச்சொல் லாக்கத்தை ஒப்புவிப்பதோ பெற்ற தாயைப் பற்றலரிடம்
ஒப்புவிப்பதே யன்றி வேறன்று. மேற்கூறிய மூவியல்புகள் உள்ளவர் குழுமிய
பின்பும் ஆத்திரப்படலாகாது. பல நூற்றாண்டுகளாய் மேலை மொழிகளில்
தோன்றிய குறியீடுகளுக்கு ஓரிரு நாளில் அல்லது மாதத்தில் நேர்சொல்
காணமுடியாது. 'பதறிய காரியம் சிதறிக் கெடும்; பதறாத காரியம் சிதறாது'.
விரைந்து செய்வது மறைந்துபோம். நீடித்துச் செய்வது நிலைத்து நிற்கும்.

     ஐதராபாத்திலுள்ள உசுமானியாப் பல்கலைக்கழகத்தார், பட்டத்
தேர்வுகட் குரிய கல்லூரிக் கல்வியை உருதுமொழியிற் புகுத்துமுன்,
நாலாண்டாகப் பொறுமையுடன் உழைத்துக் கலைச்சொற்களை யெல்லாம்
அம் மொழியில் ஆக்கிக்கொண்டனர். நாமும் அவர்களைப் பின்பற்ற
வேண்டும்.

     தமிழிலுள்ள சொற்களெல்லாம் இன்னும் தொகுக்கப்படவில்லை.
நூல்வழக்கிலுள்ள சொற்களே பல்கலைக்கழக அகராதியில் (University