பக்கம் எண் :

கனம் கிருஷ்ணையர் 51

    சொல்லடி காண்வழியைக் காட்டுமுகமாக, கோடு என்னும் சொல்லை
எடுத்துக்கொண்டு, அதன் அடியை ஈண்டு ஆய்கின்றேன்.

     கோடுஎன்னும் சொல், கோணுதல் அல்லது வளைதல் என்னும்
பொருளைக் கொண்டு, பெயராகவும் வினையாகவும் வழங்கும் சொல். இதன்
வழியாகச் சில சொற்கள் பிறந்துள்ளன.

     வளைதற் கருத்தினின்று வட்டக் கருத்தும், வட்டக் கருத்தினின்று
சூழ்தற் கருத்தும் தோன்றும். ஒரே பொருள் வட்டமாக, மேன்மேல்
வளைந்து செல்வது திருகல்முறுகலான புரிதலாதலின், வளைவுக் கருத்தி
னின்று புரிதற் கருத்தும் தோன்றும்.

     எ-கா:வளை - வளையம் (வட்டம்)

          வளை - வளைசல் (சூழ்வு)

          வளை - வளை (சங்கின் வல இடப் புரிவு.)

     கோடுதல் = வளைதல்.கோட்டம் = வளைவு, மதிலால் வளையப்பட்ட
     கோவில் அல்லது சிறைச்சாலை, வேலியால் வளையப்பட்ட மாட்டுக்
     கொட்டில்.

     கோட்டை = வளைந்த மதில், வட்டமான நெற்கூடு, மதியைச்
     சூழ்ந்துள்ள ஊர்கோள்.

     கோட்டகம் = வளைந்த குளக்கரை, கரை.

     கோடு = வளைவு, வளைந்த வரி, வரி.

     கோடு = வளைந்த மரக்கிளை, கிளை.

     கோடு = வளைந்த கொம்பு, கொம்பு.

     கோடு = வளைந்த கரை, கரை.

     கோடு = வளைந்த சங்கு, சங்கு.மலையைக் குறிக்கும் 'கோடு'
என்னும் சொல் 'குவடு' என்னும் சொல்லின் திரிபாதலின், வேறாம்.

     கோட்டம் என்னும் தென்சொல்லே, வட மொழியில் கோஷ்ட
என்றும் இலத்தீனில் castrum என்றும், அதன் வழியாய் ஆங்கிலத்தில்
'caster', 'chester' என்றும் திரியும். ஆங்கிலத் திரிவுகள் ஊர்ப்பெய
ரீறாகவும் வழங்கும்.

     எ-கா: doncaster, colchester, exeter(execester)

     இப் பெயர்களை, அறுப்புக்கோட்டை, பட்டுக்கோட்டை முதலிய தமிழ்நாட்டு ஊர்ப்பெயர்களுடன் ஒப்புநோக்குக.

     கோடு என்பதன் நேர்மூலம் கோண்.

     ஒ.நோ: பாண் - பாடு, பேண் - பேடு.

     கோண் என்னும் பகுதியினின்று, கோணு, கோணல், கோணம்,
கோணை முதலிய சொற்கள் பிறக்கும்.