6. சொற்பொரு ளாராய்ச்சி எந்நாட்டிலும் எம்மொழியிலும் பொதுமக்கள் வாயிலாய்த் தோன்றிய இயற்கைச் சொற்கள் எல்லாம் ஒவ்வோர் பொருளைக் கொண்டவையே. இதனாலேயே, "எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே"(தொல். சொல். 640) என்றார் தொல்காப்பியர். தனிச்சொல்லெல்லாம் பொருள் குறித்தனவே யெனின், அத் தனிச் சொற்களாலான தொடர்ச்சொற்களும் பொருள் குறித்தனவே யென்பது சொல்லாமலே பெறப்படும். மேனாட்டாரியரும் கீழ்நாட்டாரியரும் பல நூற்றாண்டுகட்கு முன்னரே தத்தம் மொழிச்சொற்கட்கு மூலம் கண்டு வைத்திருக்க, இவ் விருபதாம் நூற்றாண்டிலும், தக்க துணையிருந்தும், கால்டுவெல் போன்ற அயல்நாட்டறிஞர் வழிகாட்டியும் தமிழ்ச்சொற்களின் வேர்களையும் மூலத்தையும் தமிழர் காணாதும் கவனியாதுமிருப்பது பெரிதும் வருந்தத் தக்கதாகும். திரிபினாலுருவான ஆரிய மொழிகளிலும் சொல்லாராய்ச்சி பயன்படுவதாயின், இளங் குழந்தை வாயிற் றோன்றினாற் போல் இயல்பாயெழுந்த தமிழ்மொழியில் மிகமிகப் பயன்படுமென்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. தனிச்சொல் தொடர்ச்சொல் ஆகிய இருவகைச் சொற்களில், முன்னதற்கு வேர் காண்பது அரிதாயினும் பின்னதற்கு மூலங் காண்பது எளிதென்றே கூறத்தகும். அதை மெய்ப்பிக்கும் அளவாகச் சில தொடர்ச் சொற்களின் வரலாற்றைக் காட்டுகின்றேன். சீர்தூக்கல்: சீர் = துலைத்தட்டு. தூக்கல் = தூக்கி நிறுத்தல். சீர் தூக்கல் = சரக்கெடையை நிறுத்தறிந்தாற்போலப் பொருள்களின் இயல்பை எண்ணியறிதல். அரவணைத்தல்: அரவு = பாம்பு. அணைத்தல் = தழுவல். அர வணைத்தல் = பாம்பு பின்னித் தழுவினாற்போல நெருங்கக் கட்டி யணைத்தல், அங்ஙனம் அணைத்தாற்போலப் பாதுகாத்தல். கட்டாயம்: கட்டு = செலுத்து. ஆயம் = வரி. கட்டாயம் = வரி செலுத்துதல்போற் கண்டிப்பு. |