பக்கம் எண் :

90மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்


12. ஆலமரப் பெயர் மூலம்

     ஒரு சொல்லின் வேரைக் காண்டற்கு, முதலாவது, அச் சொல்,
எம்மொழிக்குரியதென்று கண்டுகொள்ளல் வேண்டும். அதன்பின், அதன்
திருந்திய அல்லது இயற்கை வடிவத்தையும், அச் சொல்லாற் குறிக்கப்படும்
பொருளின் சிறப்பியல்பையும், அதற்கும் அச் சொல்லின் அடிப்பகுதியின்
பொருட்குமுள்ள தொடர்பை அல்லது பொருத்தத்தையும் நோக்கல்
வேண்டும். ஆகுபெயராயின் அதன் இயற்பொருளையே கொள்ளல்
வேண்டும்.

     சிறப்பியல்பு, தனிச்சிறப்பும் பொதுச்சிறப்பும் என இருதிறப்படும்.
வாழைமரத்தின் வழவழப்பு, தனிச்சிறப்பு; இறால், கொடி, சுழி, திரிகை,
நெறிப்பு, பரிதி, முடம், வளையல் முதலியவற்றின் வளைவுத்தன்மை
பொதுச்சிறப்பு.

     ஆலமரத்தின் சிறப்பியல்பு அதன் அகற்சியே. "அத்திபோல் துளிர்த்து,
ஆல்போற் படர்ந்து, அரசுபோல் ஓங்கி, அறுகுபோல் வேரூன்றி,
மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர்" என்னும் வாழ்த்தியல்
மரபுத்தொடரில், "ஆல்போற் படர்ந்து" என்பது கவனிக்கத்தக்கது. "ஆல்
போல் தழைத்து" என்றும் பாட வேறுபாடுண்டு. அது சரியானதன்று.

     "உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி
      யிறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனுந்
      தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்
      வான்சிறிதாப் போர்த்து விடும்" (நாலடி. 38)

என்பது நாலடியார்.

     "தெள்ளிய வாலின் சிறுபழத் தொருவிதை
      தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
      நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
      அணிதேர்ப் புரவி யாட்பெரும் படையொடு
      மன்னர்க் கிருக்க நிழலா கும்மே"

என்பது வெற்றிவேற்கை. (17)

     இவை ஆலமரத்தின் அகற்சியைச் சிறப்பாய் எடுத்துக்காட்டுகின்றன.