அகல் என்னும் சொல், தகழியையும், அகலம் என்னும் சொல் மார்பு, மாநிலம், வானம் முதலியவற்றையும் அகற்சிபற்றிக் குறிக்கும். இவற்றுள், அகல் என்பது தகழிப்பொருளில் ஆல் என்று கொச்சை வழக்கிலும், அகலம் என்பது வான (ஆகாய)ப் பொருளில் ஆலம் என்று இலக்கிய வழக்கிலும் திரிகின்றன. இணைக் குறில்கள் இருவகை வழக்கிலும் ஒரு நெடிலாய்த் திரிவது இயல்பு. எ-கா: கொழுது-கோது சிவ-சே, சிவத்தல்-சேத்தல் தொகுப்பு-தோப்பு நுவல்-நூல் பகு-பா பகுதி-பாதி பகல்-பால் புழுதி-பூதி, பெயர்-பேர் மயல்-மால் மிகு-மீ மிகுதி-மீதி வணங்கு-வாங்கு வியர்-வெயர்-வேர் வெயர்வை-வேர்வை. இங்ஙனமே, அகல் என்னும் சொல்லும் ஆல் எனத் திரிந்து அல்லது மருவி ஆலமரத்தைக் குறிக்கின்றது. பகல்-பால் என்னும் திரிபு, அகல்-ஆல் என்பதற்கு எதுகையாயிருத்தலை நோக்குக. ஆல்-ஆலம். 'அம்' என்பது ஒரு பெருமைப்பொருள் பின்னொட்டு. ஒ.நோ:கால்-காலம், தூண்-தூணம், நிலை-நிலையம், மதி -மதியம், விளக்கு-விளக்கம். சொற்களின் வேர்களை அல்லது மூலத்தை இடையிடைத் தவறாய்க் காட்டிச் செல்லும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதிகூட, ஆல் என்னும் மரப்பெயரை அகல் என்னும் சொல்லின் திரிபாகவே காட்டியுள்ளது. -"செந்தமிழ்ச் செல்வி" மார்ச்சு 1964 |