கள் = தேன், மது = தேன். தேன் = கள். தேறல் = கள். இங்ஙனம் உணர்த்தினும் இச் சொற்கள் தம் வேர்ப்பொருள் மாறா. கள், மது என்னும் சொற்களின் வேர்ப்பொருள் மேற்காட்டப்பட்டது. இனி, தேன், தெளிவு. தேறல் என்னும் சொற்களின் சொல்லியல் வரலாறு வருமாறு: தெல் - தென் - இனிமை. ஒ.நோ: வெல் - வென் - வெற்றி. "தென்னிசை பாடும் பாணன்"(திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம். 56 :. 7) தென் என்னும் சொல் முதலாவது தெளிவு என்று பொருள்பட்டு, பின்பு தெளிவான தேனையும், தேனின் சுவையான இனிமையையும் உணர்த்திற்று.தென் - தென்பு = தெளிவு. தென்பு - தெம்பு = தெளிவு. தெளிவு என்பது முற்கூறியவாறு பொருட்டெளிவு, மனத்தெளிவு ஆகிய இரண்டிற்கும் பொதுவாதலால், தெம்பு என்பது உலகவழக்கில் மனத்தெளிவை உணர்த்திற்று. ஒ.நோ: நல் + பு = நன்பு (நன்மை) தெல் - தெள் - தெளி - தெளிவு. தெல்-(தெர்)-தெரி. தெரிதல்=தெளிவாய்த் தோன்றுதல், புலனாதல். (தெர்) - தெருள். தெருள்தல் = தெளிதல். சொல்லாக்கத்தில், லகர ளகர மெய்கள் ரகர மெய்யாகத் திரிவது பெரும்பான்மை. எ-கா: சாம்பல் - சாம்பர், கள் - (கர்) - கரு - கருப்பு. தெள் - தெறு - தெற்று. ஒ.நோ: வெள் - வெறு - வெற்று, வெள்ளிலை - வெற்றிலை தெற்று = தெளிவு, தேற்றம். தெற்றென = தெளிவாக "யானுந் தெற்றென வுணரேன்" (அகம். 48). தெற்றெனவு = தெளிவு. "தெற்றென வில்லார் தொழில்" (திரிகடு. 54). தெற்றென்னுதல் = தெளிதல். "தெற்றென்க மன்னவன் கண்" (குறள் 581). தெற்றல் = அறிவில் தெள்ளியவன். "இனையரு திற்றுவீழ நடைகற்ற தெற்றல்" (திவ். பெரிய திருமொழி 11 : 4 : 9) தெறு - தேறு, தேறுதல் = தெளிதல் தேறு = தெளிவு, தேற்றம், தேற்றாங்கொட்டை. |