பக்கம் எண் :

பழந்தமிழாட்சி101

ஆற்றிற்குக் குறுக்கே அணை கட்டலும்; பேராற்றினின்று கண்ணா றும், கண்ணாற்றினின்று கால்வாயும், கால்வாயினின்று வாய்க் காலும் வெட்டலும்; இவை இயலாவிடத்து, ஏரி குளம் தொடுதலும் அக்காலத்தரசர் மேற்கொண்ட செயல்களாம். கண்ணாறுங் கால் வாயும் பெரும்பாலும் சோழநாட்டிலும், ஏரி குளம் பெரும்பாலும் பாண்டி நாட்டிலும் வெட்டப்பட்டன.


     கரிகால் வளவன் ஈழத்தினின்று பன்னீராயிரம் மக்களைச் சிறை பிடித்துக் கொணர்ந்து காவிரிக்குக் கரை கட்டுவித்தான். இராசேந்திரச் சோழன் சோழகங்கம் என்னும் ஏரியை வெட்டினான். முடிகொண்டான் ஆறும் அவனால் வெட்டப்பட்டது போலும்! காவிரிக் கல்லணை கி.பி. 1068ல் வீரராசேந்திரனால் வெட்டப் பட்டதாகத் தெரிகின்றது.


     சோழநாட்டில் இன்னின்ன கண்ணாறு இன்னின்ன வள நாட்டிற்கும், இன்னின்ன கால்வாய் இன்னின்ன வூருக்கும், இன்னின்ன வாய்க்கால் இன்னின்ன பாடக வரிசைக்கும், பாய வேண்டுமென்னும் ஏற்பாடிருந்தது. அதனால் வேலியாயிரம் விளையவும், ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கவும், இருபூவும் முப்பூவும் எடுக்கப்படவும் இயல்வதாயிற்று. பூவென்பது வெள்ளாண்மை.


     அரசரின் ஊக்குவிப்பு: நிலம் சரியாய் விளையாதவிடத்தும் கடுந் தண்டலாளரைப்பற்றி முறையிட்டவிடத்தும், அரசர் வரிநீக்கஞ் செய்தனர். அயல்நாடுகளிலுள்ள அரிய விளைபொருள் களைக் கொண்டுவந்தும் தமிழ்நாட்டிற் பயிரிடச் செய்தனர்.


".........அந்தரத்
தரும்பெற லமிழ்த மன்ன
கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே"
      (புறம். 392)


என்று அதியமான் மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடி யிருப்பதால், அவன் முன்னோருள் ஒருவன் சீனத் திலிருந்தோ சாவ கத்திலிருந்தோ, கரும்பைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்ததாகத் தெரிகின்றது.2 மருதநிலத் தெய்வமாகிய வேந்தன் என்னும் இந்தி ரனுக்குப் புகார்ச் சோழர் விழாக் கொண்டாடியதும், அவன் உழவுத் தொழிற்கு வேண்டும் மழைவளந் தருவன் என்னும் குறிக்கோள் பற்றியதே போலும்!



2. கரும்பு கீழ்நாட்டில் முதலாவது சீனத்திலும் பின்பு சாவகத்திலும் பயிராயது. சீனரை வானவர் என்றும் சீனத்தை வானவர் நாடு என்றும் அழைத்தனர் முன்னோர். இனி, சாவகம் நாகநாட்டைச் சேர்ந்ததாதலானும், தேவருலகிற்கு நாகநாடு என்னும் பெயருண்மையானும், சாவகநாட்டு நாகபுரத்தரசர் இந்திரன் என்ற குடிப்பெயர் கொண்டிருந்தமையானும், சாவகத்தை இந்திர நாடு என்று கூறினர் முன்னோர்.