அறத்திற்கும் கட்டளைக்கும் கோயிற்குக் கொடுக்கப்படும் பணத் தொகைகள், கோயிலதிகாரிகளிடமாவது, ஊரவையாரிட மாவது, நகரத்தாரிடமாவது, தனிப்பட்டவரிடமாவது ஒப்படைக் கப்படுவதுண்டு. (3) கல்வித்துறை: எண்ணாயிரம் என்ற இடத்தில் ஒரு மறை நூல் ( வேத) விடுதிக் கல்லூரியும், திருமுக்கூடல் என்னும் இடத்தில் ஒரு வடமொழி விடுதிக் கல்லூரியும் திருவொற்றியூரில் வியாகரண தான மண்டபம் என்னும் வடமொழிப் பாணினியிலக்கணக் கல்லூரியும், கோயிலோடு சேர்க்கப்பட்டிருந்தன. எண்ணாயிரத்தில் 500 மாணவரும் 10 ஆசிரியரும் இருந்தனர். சில இடங்களில் வான நூலும் தருக்கமும் பிரபாகரம் என்னும் மீமாம்சை நூலும் வடமொழியிற் கற்பிக்கப்பட்டன. மாணவர்க்குக் கல்வியும் ஊணுடையுறையுளும் இலவசமாய் அளிக்கப்பட்டன. அதற்குப் போதிய இறையிலிகள் விடப்பட்டிருந்தன. பல இடங்களில் இதிகாச புராணங்கள் பொதுமக்கட்குத் தமிழில் விரித்துரைக்கப்பட்டன. அதற்கும் இறையிலி விடப்பட்டி ருந்தது. (4) கலைத்துறை: இசை கூத்து ஓவியம் சிற்பம் வண்ணம் முதலிய பல கலைகள், கோயில் வாயிலாய் வளர்க்கப்பெற்றன. (5) வரலாற்றுத் துறை: கல்வெட்டுகள், கோயில், மண்டபம், பாறை, வெற்றித்தூண், மலைக்குகை, படிமை, நடுகல் முதலிய பலவிடங்களில் வெட்டப்பட்டனவேனும், பெரும்பான்மையாகக் கோயில்களிலேயே அவை இடம்பெற்றன. கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தமிழரசர் வரலாற்றை அறிதற்கு உறுதுணையானவை கல்வெட்டுகளே. அரசருடைய போர்ச் செயல்களையும் வெற்றியையுங் கூறும். மெய்க்கீர்த்திகளும்,ஊரவையாருக்கும்நாட்டதிகாரிகட்கும் பிறர்க்கும் விடுக்கப்பட்ட அரசாணைகளும், ஊரவையாரால் அன்றன்று செய்யப்பட்ட புதுத் தீர்மானங்களும், அரசராலும் அதிகாரிகளாலும் பெருமக்களாலும் கொடுக்கப்பட்ட தானப் பட்டயங்களும் கல்லில் வெட்டப்பட்டுக் கோயிலில் எல்லாருங் காணு மிடத்திற் பதிக்கப்பெறுவது, தவிரா வழக்கமாயிருந்தது. ஒரு சிதைந்த கோயிலைப் புதுப்பிக்கும்போது, ஊரவையார் நாட்டதிகாரி வாயிலாய் அரசனுக்கறிவித்து அவனது இசைவு பெற்ற பின், கோயிலிலுள்ள கல்வெட்டுகளை "இச்சிரி விமானமிடித்துக் கட்டுங்கால் கண்ட சிலாலேகைப்படி" என்று தொடங்கி ஓலைப் படி யெடுத்து, புதுக் கல்வெட்டுப் பொறித்து, கோயில் கட்டி |